திருமணம், சடங்கு உள்ளிட்ட வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளின்போதும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வருவோர்களுக்கும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நமது பண்பாட்டிலேயே இருக்கிறது. பலருக்கு ஏன் ஆரத்தி எடுக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லாமல், அதை ஒரு பழக்கமாகவே செய்கின்றனர். குறிப்பாக, ஆரத்தி எடுத்தால் கண் திருஷ்டி உள்ளிட்ட திருஷ்டிகள் கழியும் என்ற நம்பிக்கையும் பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Continues below advertisement

ஆரத்தி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஆனால், ஆரத்தி எடுப்பதில் அறிவியல் ரீதியான பல நல்ல விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள், அதோடு ரசாயண கலவையான சுண்ணாம்பு சேர்த்து, அதோடு தண்ணிரை கலந்தால் இரண்டும் சிவப்பு நிறமாக மாறும். அதில் கற்பூரத்தை வைத்து தீ மூட்டுவதால் ஏற்படும் உஷ்ணம் மூலமாக காற்றில் உள்ள கிருமிகள் அழியும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இதை பற்றி பேசுபவர்கள். இதனால்தான் வெளிநாடு, வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியதாகவும், அவர்கள் பலருடன் பழகி, பல ஊர்களை கடந்து வீட்டுக்கு வருவதால் அவர்கள் மீது கிருமி தொற்று ஏற்பட்டு இருக்கும் என்பதால் இந்த வழிமுறையை கண்டுபிடித்து ஆரத்தி எடுக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டுவந்ததாகவும், கிருமிக்குதான் ஆரத்தி எடுக்கிறேன் என்று சொன்னால் பலரும் அதை தட்டிக் கழிப்பார்கள் என்பதாலேயே கண் திருஷ்டி நீங்கும் என்பதுபோன்ற கட்டுக் கதைகளை அதோடு சேர்த்து இந்த வழக்கத்தை கடைபிடிக்க வைத்ததாக சமய, பழக்க வழக்கங்கள் குறித்தும் ஆராயும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Continues below advertisement

அறிவியல் விஞ்ஞானி சொல்வது என்ன ?

ஆராத்தி எடுக்கப்படும் மனிதர்களை சுற்றியுள்ள கிருமிகள் அவர்களை விட்டு நீக்கப்படுவதுதான் அறிவியல் ரீதியான உண்மை என பலரும் சொல்லியிருக்கும் நிலையில், இது குறித்து மூத்த விஞ்ஞானியும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான த.வி.வெங்கடேசுவரனிடம் பேசினோம். அதற்கு அவர் ‘மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து ஆரத்தி எடுப்பதால் கிருமிகள் காற்றில் உள்ள கிருமிகள் கொல்லப்படுவதாக சொல்வதெல்லாம் உண்மை இல்லையென்றும், இது ஒரு பண்பாட்டு, பாரம்பரிய வழக்கமாக மட்டுமே பின்பற்றப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் ஆரத்தி பழக்கம் என்பது போர்களுக்கு படைவீரர்கள் செல்லும் முன்னரும், வெற்றி பெற்று அவர்கள் வீடும் திரும்பும்போதும் செய்யப்பட்ட பழக்கம் என்றும் இது வெற்றியின் வீரத்தின் அடையாளமாகவும் கருதப்படுவதே காரணம் என்றும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்பவர்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியே, ஆரத்தி எடுப்பதில் எந்த தீமைகளும் இல்லை என்பதால் அதற்கு யாரும் இதுவரை தடை சொல்லவில்லை.