காதல் இல்லையேல் உலகம் ஏது? உயிர்கள் ஏது? அன்பால் பிணைக்கப்பட்ட மனிதர்களின் கொண்டாட்டத்துக்கு உகந்த நாளாக, காதலர் தினம் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (பிப்.14) விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரமாய்த் தினந்தோறும் முத்த தினம், சாக்லேட் தினம், டெடி தினம், ரோஜா தினம் என பல்வேறு தினங்களைக் காதலர்கள் கொண்டாடி வந்த நிலையில், இன்று இறுதியாகக் காதலர் தினம் களைகட்டியுள்ளது.
எல்லோருக்கும் காதல் அமைந்துவிடுவதில்லை. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்கள். காதலுக்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருப்பவர்கள், காதல் முறிந்தவர்கள், இன்று முதல் காதலிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில், வெவ்வேறு சூழலில் இருப்பார்கள்.
என்னென்ன அர்த்தம்?
இந்த தினத்தில் எந்தெந்த வண்ண ஆடைகள் அணிந்து வந்தால், என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.
சிவப்பு ஆடை
சிவப்பு என்றாலே காதலின் சின்னம்தான். சிவப்பு ரோஜா அன்பின் அடையாளமாய்க் கூறப்படுகிறது. சிவப்பு வண்ணம், நீங்கள் ஏற்கெனவே காதலில் உள்ளீர்கள் அல்லது உறவில் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
அடர், வெளிர் நீலம்
நீல நிறம் நீங்கள் காதலுக்காகத் திறந்த மனத்துடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள், யார் வேண்டுமானாலும் உங்களை அணுகலாம் என்பதை சொல்லாமல், சொல்வது.
பச்சை
பச்சை நிறம், ஏற்கெனவே வெளிப்படுத்திய காதல் கைகூடும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பது. காத்திருப்பே பச்சை உடைக்கான குறியீடு என்கின்றனர் காதலர்கள்.
கருப்பு
நிராகரிப்பு அல்லது உறவின் முடிவை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிற உடை அணியப்படுகிறது.
வெண்மை வண்ண ஆடை
அமைதியையும் புதிய உறவுக்கான தொடக்கத்தையும் வெண்ணிற ஆடை எடுத்துக் காட்டுகிறது.
ஆரஞ்ச் நிற உடை
நீங்கள் ஒருவரின் மீது கிரஷ்ஷாக (காதலின் ஆரம்பம்) இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவது.
ஊதா
உங்களுக்குக் காதலின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை என்பதையே ஊதா வண்ண ஆடை எடுத்துக் காட்டுகிறது.