புதிய துணிகளை வாங்கியவுடன் அப்படியே உடுத்துகிறீர்களா?இதைத் தெரிஞ்சிக்கோங்க! முழு விவரம்
தொழிற்சாலையிலிருந்து கடைக்கு வரும் வரை, புதுத்துணிகள் பல செயல்முறைகளையும் பலரது கைகளையும் கடந்து வருகின்றன. இதனால் அவற்றில் ரசாயனங்களும் அழுக்குகளும் படிந்திருக்கக்கூடும்.

நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வாங்கிய ஆடையாக இருந்தாலும் சரி, ஒரு சிறப்பு நிகழ்விற்காக வாங்கிய உடையாக இருந்தாலும் சரி, அவற்றை தாமதமின்றி உடனே உடுத்தவே நாம் விரும்புவோம். ஆனால், ஒரு முக்கியமான உண்மையை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுகிறோம்: இந்தப் புதிய துணிகள் தோற்றமளிப்பது போல சுத்தமானவை அல்ல. தொழிற்சாலையிலிருந்து கடைக்கு வரும் வரை, இவை பல செயல்முறைகளையும் பலரது கைகளையும் கடந்து வருகின்றன. இதனால் அவற்றில் ரசாயனங்களும் அழுக்குகளும் படிந்திருக்கக்கூடும்.
புதிய துணிகளை ஏன் துவைக்க வேண்டும்?
துணிகள் தயாரிப்பின் போது, அவை நீண்ட காலம் உழைக்கவும், போக்குவரத்தின் போது சேதமடையாமல் இருக்கவும், கடைகளில் அழகாகக் காட்சி அளிக்கவும் சாயங்கள் (Dyes) மற்றும் பினிஷிங் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் வாங்கிய பிறகும் இந்த ரசாயனங்கள் துணியிலேயே தங்கியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்முறை அணிவதற்கு முன்பு துவைப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். மேலும், துணிகள் பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெவ்வேறு சூழல்களில் சேமிக்கப்படுவதால், அவற்றில் தூசி, பாக்டீரியா மற்றும் பிற அசுத்தங்கள் சேரக்கூடும். கடைகளில் பலரும் அந்தத் துணிகளை அணிந்து பார்த்து (Trial) சோதிப்பதால், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
ரசாயனங்களின் தாக்கம்
பல்வேறு அறிக்கைகளின்படி, துணிகள் சுருங்காமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) அல்லது துணிகளுக்கு விறைப்புத்தன்மையைக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டார்ச் (கஞ்சி) போன்ற ரசாயனங்கள் சருமத்தைப் பாதிக்கலாம். இவை ஒவ்வாமை (Allergy), அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும், குறிப்பாக உணர்திறன் கொண்ட சருமம் (Sensitive skin) உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
துவைப்பது சுத்தத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, துணியின் நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் அதிகப்படுத்துகிறது. தொழிற்சாலைகளில் துணிகள் இழுக்கப்பட்டு இறுக்கமாகத் தயார் செய்யப்படுவதால், அவை அவற்றின் இயற்கையான வடிவத்தை இழந்திருக்கலாம். முதல்முறை துவைத்த பிறகு, துணிகள் தளர்வாகி அவற்றின் இயல்பான வடிவத்திற்கு வருவதால் அணிவதற்கு வசதியாக இருக்கும். குறிப்பாகப் பருத்தி (Cotton) துணிகள் சிறிதளவு சுருங்குவது இயல்பானது.
ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி வெக்ஸ்னர் மெடிக்கல் சென்டரின் தோல் மருத்துவர் டாக்டர் சூசன் மெசிக் கூறுகையில், புதிய ஆடைகளை அணிந்த பிறகு சருமப் பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளைத் தான் அடிக்கடி சந்திப்பதாகத் தெரிவிக்கிறார். உடலின் உராய்வு அதிகம் உள்ள பகுதிகளான அக்குள், இடுப்பு, கழுத்து மற்றும் தொடை இடுக்குகளில் அரிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்படுவது மிகவும் பொதுவானது.
கவனிக்க வேண்டியவை
இருப்பினும், சில சமயங்களில் புதிய துணிகளை உடனடியாகத் துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக, ஜேக்கெட்டுகள் (Jackets) அல்லது தோலில் நேரடியாகப் படாத ஆடைகளைத் துவைக்காமல் அணியலாம். ஆனால், 'டிரை கிளீன்' (Dry clean only) என்று குறிப்பிடப்பட்ட துணிகளை வீட்டில் துவைத்தால் அவை சேதமடையக்கூடும்.
துவைக்காமல் அணிவது எப்போதும் பெரிய பிரச்சனையாகாது என்றாலும், அதில் ஆபத்து ஒளிந்திருக்கிறது. கருமையான நிறம் கொண்ட துணிகள் (உதாரணமாக: டெனிம் ஜீன்ஸ்) முதல் முறை துவைக்கும்போது நிறத்தை வெளியேற்றும். துவைக்காமல் அணிந்தால், அந்தச் சாயம் உங்கள் சருமத்திலோ அல்லது மற்ற துணிகளிலோ ஒட்டிக்கொள்ளக்கூடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானது அல்ல. ஏதேனும் புதிய செயல்பாட்டைத் தொடங்கும் முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது நிபுணரை அணுகவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























