நிலா காட்டி சோறு ஊட்டிய  குழந்தை வளர்ப்பு இன்றி மொபைல்ஃபோன்களின் நிலா பாட்டு காட்டி சோறு ஊட்டுவதாக மாறிவிட்டது இந்த காலம். மாறிவரும் நாகரீக வாழ்க்கையும் சிறுவயதில் குழந்தைகளுக்கு மொபைல் பயன்பாட்டின் தேவையை உணர்த்துவதாக உள்ளது. தற்போதைய கொரோனா சூழலும் குழந்தைகளின் மொபைல் தேவைக்கு முட்டுக்கொடுப்பதாகத்தான் உள்ளது. நடனம், இசை, பாட வகுப்புகள் என அனைத்தும் ஆன்லைனில் கற்றுக்கொடுக்கப்படுவதால், பெற்றோர்கள் தனி மொபைல்ஃபோன்களை குழந்தைகளுக்கு பரிசளிக்கின்றனர். 




குழந்தைகள் இணைய செயல்பாடுகளை பாதுகாப்பாக கையாளாவிட்டால், அது பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு வித்தாக மாறிவிடும். பெரும்பாலான சைபர் குற்றங்களில் குழந்தைகளுக்கும் பங்கிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?


குழந்தைகளின் இணைய செயல்பாடுகளை எப்போதும் நோட்டமிடுங்கள் ! உங்கள் குழந்தை படிக்கும் அல்லது பார்க்கும் தளங்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும்,  தேவையில்லா வலைத்தள பக்கங்களில் நுழைவதை கண்டறிந்தால், உடனே அந்த பக்கங்களை அணுக முடியாதபடி முடக்கிவிடுங்கள்.




குழந்தைகளுடனான உறவை எப்போதும் வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிக்கவேண்டும். நேரில் அறிமுகம் இல்லா நபரோடு நட்பு பாராட்டுவது  எப்படி தவறோ, அதேபோல ஆன்லைனில் முன்பின் தெரியாதவறோடு பேசுவதும் தவறுதான் என்பதை கற்றுக்கொடுங்கள். பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் மொபைல்ஃபோன், அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பது தவறானது என்றாலும், சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் குறித்த கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் கையில் இருக்கவேண்டும். 




இதற்காக பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம். ஐபோனின் ஸ்க்ரீன் டைம் என்ற வசதி மூலமாக குழந்தைகளின் இணைய நேரம் மற்றும் ஆக்சஸை கணக்கிட முடியும். privacy and sharing settings  போன்றவற்றை மாற்றியமைப்பதன் மூலம்  குழந்தைகளின் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதைத் தடுக்கமுடியும். குழந்தைகள் ஆன்லைன் செயல்பாட்டை மறைக்க முயற்சித்தல், வழக்கத்திற்கு மாறிய நடத்தைகள், அதீத கோபம், பதற்றம் , மனச்சோர்வு உள்ளிட்டவை காணப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் தவறான வழியில் செல்வதற்கான அறிகுறிகள் இவை. உங்கள் மேற்பார்வையில் இணைய செயல்பாடுகளை ஏற்படுத்திக்கொடுங்கள்.