உலகெங்கிலும் சமீபகாலமாக தம்பதிகள் தாங்கள் தாம்பத்ய உறவை மேறகொள்ளும்போது முழு திருப்தி அடையாமை, தம்பதிகள் ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்த இயலாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது. மாறி வரும் உணவுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தம்பதிகள் தங்களிடம் திருப்தியாக உடலுறவு கொள்ள முடியாததற்கு கீழ்க்கண்டவையும் காரணங்களாக கூறப்பட்டுள்ளது.



  • அளவுக்கதிகமாக செல்போன் பயன்படுத்துதல் :


இன்றைய காலத்தில் செல்போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, செல்போனில் வரும் குறுஞ்செய்தி, அதற்காக வரும் நோட்டிபிகேஷன்ஸ் இதைப் பார்ப்பதில் அதிக ஆர்வத்தை காட்டுகிறோம்.




தம்பதிகள் தங்களிடமே உடலுறவு வைத்துக்கொள்ளும்போதும் கூட செல்போன்களில் வரும் குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், அழைப்புகள் ஆகியவற்றின் மீது அதிக கவனத்தை செலுத்துவதால் செக்ஸ் மீது முழு கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், தம்பதிகள் தாங்கள் உடலுறவில் ஈடுபடும்போது செல்போன்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், செல்போன்களை சைலண்ட் மோடில் வைப்பதும் மிகவும் சிறந்தது.



  • மன அழுத்தத்திலே இருப்பது:




அனைவரது வாழ்விலும் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களினால் ஒருவித மன அழுத்தம், மன உளைச்சல் உண்டாவது இயல்பு. அந்த அழுத்தங்கள், உளைச்சல்களில் இருந்து மீள்வதற்கு செக்ஸ் என்பது மிகச்சிறந்த நிவாரணம். ஆனால், தம்பதிகள் தங்களிடையே உடலுறவு கொள்ளும்போதும் மன உளைச்சல்கள், பிரச்சினைகள், சிக்கல்களை சிந்தித்துக் கொண்டிருந்தால் செக்ஸில் முழு திருப்தி அடைய முடியாது. இது ஏற்கனவே இருக்கும் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதனால், செக்சில் ஈடுபடும்போது தேவையற்ற கவலைகளை பற்றி சிந்திக்கக்கூடாது.



  • உடற்பயிற்சி இன்மை :




தம்பதிகளிடையே போதிய அளவு உடற்பயிற்சி இன்மையும் முழு திருப்தியுடன் செக்ஸில் ஈடுபட முடியாததற்கு ஒரு காரணம். காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதன்மூலம் ரத்த ஓட்டங்கள் சீராக உடலில் இருக்கும். நமது மனதிலும் புத்துணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். உடற்பயிற்சி இல்லாமலே இருந்து உடலுறவில் ஈடுபடும்போது முழு உத்வேகத்துடன் உடலுறவு கொள்ள முடியாத நிலை ஏற்படும்.



  • அதீத எதிர்பார்ப்புகள் :




செக்ஸ் என்பதை பொறுத்தமட்டிலே ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். இதை வரையறைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். இதனால், எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது என்று கூற முடியாது. அதேசமயத்தில், திரையில் பார்த்த ஆபாச படங்கள், செவி வழி கேட்ட கதைகள் ஆகியவற்றை வைத்து நேரிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளுடன் செல்லும்போது அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனால் ஏமாற்றமடைய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. நேரடியாக உறவில் ஈடுபடாமல் தம்பதிகள் தங்களிடையே உறவுக்கு முந்தைய முத்தம், போர்பளே போன்றவற்றில் ஈடுபட்டால் இருவரின் உணர்ச்சிகளும் தூண்டப்படும். அதேசமயத்தில், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளில் இருந்து வெளியில் வர வேண்டும்.


மேற்கண்ட காரணங்களை தவிர்த்து தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் மத்தியில் புரிதலுடன் உறவில் ஈடுபட்டால் நிச்சயம் முழு திருப்தி அடைய முடியும்.