தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும். 
இன்றைய தலைமுறையுனருக்குச் சலித்துப்போய்விட்ட ஓர் உணவான இட்லி, அக்காலத்தில் ஏழைகள் பலருக்கும் எட்டாக்கனி போன்ற உணவு. பண்டிகை நேரங்களில் மட்டுமே வீட்டில் செய்யக்கூடிய உணவாகவும் இருந்தது.


இட்லியின் பூர்வீகம் இந்தோனேசியா எனக் கூறுகிறார் உணவு வரலாற்று பதிவர் கேடி ஆச்சார்யா.
உலகச் சுகாதார நிறுவனத்தின் ‘ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்த உணவு வகைகள்’  பட்டியலில், இட்லிக்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 


இட்லியில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது.இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும்  உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவராயிருந்தால், இட்லி ஒரு சரியான தேர்வாக இருக்கும். இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருப்பதனால், அதீத பசியைத் தடுக்கும். ஜிம்களில் பல மணிநேரம் செலவழித்து, உண்ணாவிரதம் இருந்து உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக நீங்கள் இருந்தால், இட்லிகளை உங்கள் நண்பனாக்கிக்கொள்ள வேண்டிய நேரம் இது.


அதுவும் கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்கள். கொள்ளு இட்லி செய்து சாப்பிட்டால் வெயிட் லாஸுக்கு நல்ல பலன் கிட்டும் எனக் கூறுகிறார்கள்.






கொள்ளு இட்லி மாவு தயாரிக்கும் முறை


அரை கப் உளுந்து முக்கால் கப் கொள்ளு எடுத்துக் கொள்ளவும். இன்னொரு பவுலில் 1 கப் இட்லி அரிசி சேர்க்கவும். இவற்றை தனித்தனியாக அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் க்ரைண்டரில் சேர்த்து அரைக்கவும். 20 நிமிடங்கள் நன்றாக அரைக்கவும். முதலில் உளுந்து, கொள்ளு சேர்த்து அரைக்கவும் பின்னர் இட்லி அரிசி சேர்த்து அரைக்கவும்.
 இதை ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப அதில் உப்பு சேர்க்கவும்.
பின்னர் இட்லி மாவை வழக்கம் போல் புளிக்க விடவும். மறுநாள் அதனை வழக்கமான இட்லி பாத்திரத்தில் இட்லியாகவும் ஊற்றலாம். இல்லாவிட்டால் சிறு பவுல்களில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வேக வைக்கலாம்.
சுவையான கொள்ளு இட்லி தயார்.