மீன் வறுவல், மீன் குழம்பு என ருசி பார்த்த அசைவ பிரியவர்களுக்கு மீன் தந்தூரி நச்சென்ற டிஷ்ஷாக இருக்கும். என்னது மீன் தந்தூரியா...அதுவும் கிரீன் ஃபிஷ் தந்தூரியா என கேட்கலாம். ஆம், பச்சை மீன் தந்தூரி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..


ஆரோக்கியம் தரும் மீன்:


கடல் உணவு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரும்பாலானோர் மீன் வறுவலை தான் விரும்புவார்கள். குழம்பு மீன் தான் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுவது. மீனில் இருக்கும் விட்டமின் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துவதும் உண்டு. குழம்பு மீன் சாப்பிட விரும்பாதவர்கள் கொஞ்சம் வித்யாசமான டேஸ்டில் மீன் சாப்பிட விரும்பினால் மீன் தந்தூரியை ருசி பார்க்கலாம். 


சிக்கன் தந்தூரி, பன்னீர் தந்தூரி கேள்வி பட்டிருக்கலாம். அது என்ன மீன் தந்தூரி என கேட்கலாம். ரெசிபியை பார்த்துவிட்டு டேஸ்ட் எப்படின்னு தெரிந்து கொள்ள நீங்களே வீடுகளில் செய்து பார்க்கலாம்.


பச்சை மீன் தந்தூரி செய்ய தேவையான பொருட்கள்


முள் அதிகம் இல்லாத சதைப்பற்றுடைய மீன் - 5, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - சிறிதாக இருந்தால் 10 , புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 5, தயிர் - ஒரு கப், எலுமிச்சை - 1, கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு




பச்சை மீன் தந்தூரி செய்யும் முறை


மீன்களை துண்டுகளாக வெட்டாமல் முழு மீனாக சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது, மீன் தந்தூரிக்கு தேவையான மசாலாவை செய்து கொள்ளலாம். மிக்சி ஜாரில் எடுத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி, 5 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.


அதனுடன் ஒரு கப் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா பொடி, மிளகு தூள், சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு,  தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவை எடுத்து கொள்ள வேண்டும். 




பின்னர் சுத்தமாக கழுவி வைத்துள்ள மீன்களில் அந்த மசாலாவை நன்றாக தடவி விட்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் மசாலா பொருட்கள் மீனில் ஊறி அதன் சுவை கூடுதலாக இருக்கும். மீனை துண்டாக அறுக்காமல் செய்வதால் அதன் மேற்புறங்களில் கீறி விட வேண்டும். அப்பொழுது தான் மீனிற்கு உள் பகுதியிலும் மசாலா சென்றடையும். 


மீன்,  தந்தூரி மசாலாவில் நன்றாக ஊறியதும், அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கம்பி ரேக்கை வைக்க வேண்டும். கம்பி ரேக் சூடானதும், அதன் மீது மசாலா தடவி வைத்துள்ள மீனை வைத்து சூடாக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு கீழ் புறத்தை மேல்புறமாகவும், மேல் புறத்தை கீழ்ப்புறமாகவும் திருப்பி வைத்து மீனை வேக வைக்க வேண்டும். அடுப்பின் தீ அதிகமாக இருக்க கூடாது. மீன் ரெடியாகும் போதே அதன் மீது வெண்ணய் தடவலாம். 


பச்சை மீன் தந்தூரி நன்றாக வெந்ததும் அதை எடுத்து பிளேட்டில் வைத்து விட வேண்டும். அதனுடன் வெங்காய துண்டுகள், எலுமிச்சை துண்டுகள் வைத்து பரிமாறலாம். விடுமுறை நாட்களில் பிடித்த உணவு செய்ய விரும்பினால் சுவையான பச்சை மீன் தந்தூரி செய்து குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்கலாம். இதுபோன்ற அசைவ உணவுகளை வீட்டில் செய்வதால் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.