தென்னிந்திய காலை உணவு வகைகளுக்கு இந்தியா முழுவதுமே மவுசு அதிகம். கும்பகோணம் ஃபில்டர் காபி தொடங்கி இட்லி சாம்பார் வரை அத்தனையும் அவ்வளவு பிரபலம். அரிசி மாவு உணவை தாண்டி தென்னிந்திய உணவில் ரவையும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ரவா மாசாலா தோசை, ரவா அப்பம் என பல வகையான உணவுகள் உண்டு.


அதில் ஒரு எளிமையான உணவு ரவா ஊத்தப்பம். 


ரவா ஊத்தப்பம் செய்ய உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள சில எளிமையான பொருட்களே போதும். 


1 கப் ரவை
1 கப் புளித்த தயிர்
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 கேரட்
1 குடை மிளகாய்
1 பச்சை மிளகாய்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
1 கை அளவு கொத்தமல்லி


ரவா ஊத்தப்பம் செய்முறை:


முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.


இப்பொழுது ஒரு bowl ல் ஒரு கப் அளவு ரவையை கொட்டி அதில் அரை மேஜைக்கரண்டி உப்பு மற்றும் ஒரு கப் அளவு புளித்த தயிரை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
ரவையும் தயிரும் ஒன்றாக சேர்ந்து கெட்டியானதும் அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் மாவு நன்கு ஊறி கெட்டியாக ஆகி இருக்கும். இப்பொழுது அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை கரைத்து கொள்ளவும். (மாவு அதிகம் கெட்டியாகவோ அல்லது அதிகம் தண்ணியாகவோ இருக்கக்கூடாது.)


மாவை சரியான பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலக்கிய பின் சுமார் ஒரு 5 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
மாவு உருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை தடவி சுட வைக்கவும்.


கல் சுட்டதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து தோசை ஊற்றுவதை விட சிறிதளவு கனமாக ஊற்றி அதை சுற்றி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றவும்.


பின்பு அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தூவி விட்டு கரண்டியின் மூலம் மெதுவாக அழுத்தி விடவும்.


அடுத்து ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு மெதுவாக அதன் மேலே கரண்டியை வைத்து அழுத்தி விடவும். அப்பொழுது தான் காய்கறிகளும் நன்கு வெந்து ஊத்தாப்பதோடு ஒன்றி வரும்.
இரு புறம் வெந்ததும் ஊத்தாப்பத்தை எடுத்து ஒரு தட்டில் வைத்து தேங்காய் சட்னியோடு அல்லது புதினா சட்னியோடு பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.


இவ்வாறே மீதமுள்ள மாவையும்  கல்லில் ஊற்றி ரவா ஊத்தாப்பத்தை சுட்டு கொள்ளவும். அவ்வளவு தான் இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ரவா ஊத்தப்பம் தயார்.