முருங்கைக்கீரை பருப்பு கடையல் எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.


என்னென்ன தேவை?


துவரம் பருப்பு - 2 கப் 


முருங்கைக்கீரை - 2 கப்


வெங்காயம் - 1


தக்காளி - 2


பூண்டு - ஒரு கப்


மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன் 


சீரகம் - ஒரு ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


சிவப்பு மிளகாய் - 5


எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 


செய்முறை:


முருங்கைக்கீரையை சுத்தம் செய்து தனியே வைக்கவும். துவரம் பருப்பை 40 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும். பருப்பை வேக வைத்து, கீரையை வதக்கி தனியே சேர்க்கலாம். இல்லையென்றால் இதை குக்கரில் ஒரு பாட் மீல் போல செய்துவிடலாம். 


அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். இப்போது ஊற வைத்த பருப்பு சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விடவும்.


பருப்பு வெந்ததும்ம் அதில் முருங்கைக்கீரை சேர்த்து வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்கினால் முருங்கைக்கீரை பருப்பு கடையல் தயார். வாரத்திற்கு இரண்டு முறை முருங்கைக்கீரை அல்லது ஏதாவது ஒரு கீரை வகையில் இப்படி செய்து சாப்பிடலாம்.


முருங்கைக்கீரை நன்மைகள்:


முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிக கால்சியம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்க,  இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது,  கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீக்குதல், உடலுக்கு போதுமான அளவு இரும்புச்சத்து கிடைப்பது உள்ளிட்டவற்றிற்கு முருங்கைக்கீரை நல்லது. 


இட்லிப் பொடி அரைக்கும்போது முருங்கைக்கீரையை நிழலில் உலர்த்தி நன்றாக காய்ந்ததும் அதை சேர்க்கலாம். இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம். 


பருப்பு பொடி அரைப்பது போலவே, அதற்கு தேவையான பொருட்களுடன் ஒரு கப் முருங்கைக்கீரையை சேர்த்தால் முருங்கைக்கீரை பொடி தயார். இதை நிலக்கடலை, முந்திரி சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம்.