கேழ்வரகு ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். கேழ்வரகில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி ஆகியவை உள்ளன.  மேலும் இதில் இரும்புச் சத்து, கால்சியம்,  ஆக்ஸிஜனேற்றிகள், புரதங்கள், நார்ச்சத்துக்கள்,  போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கேழ்வரகை உட்கொள்வது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்பு வலிமையை பராமரிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. கேழ்வரகில்  இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால்  இது இரத்த சோகையை போக்குவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் சொல்லப்படுகின்றது. 


முளை விட்ட கேழ்வரகை காலையில் உட்கொள்வது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருவதாகவும், ராகியில் உள்ள அபரிமிதமான இரும்பு மற்றும் கால்சியம் காரணமாக, பால் உற்பத்தியைத் தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய கேழ்வரகை கொண்டு ராகி சீலா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.


தேவையான பொருட்கள்


1 கப் ராகி மாவு,  2 டீஸ்பூன் கடலை மாவு,  2 டீஸ்பூன் தயிர், 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1 தக்காளி பொடியாக நறுக்கியது, 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,  1/2 கப் குடை மிளகாய், 1 டீஸ்பூன் நொறுக்கப்பட்ட முந்திரி (விரும்பினால்), 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 தேக்கரண்டி இஞ்சி, சீலாக்களை வறுக்க நெய் அல்லது எண்ணெய். 


செய்முறை


1. ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு மற்றும் தயிர் சேர்க்க வேண்டும். பின் இந்த மாவில் மேலே குறிப்பிட்டுள்ள நறுக்கிய குடை மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலைகள், உள்ளிட்ட காய்கறிகளை சேர்க்க வேண்டும். 

 

2. முந்திரி, மிளகாய் தூள், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து , உப்பை சரிபார்க்க வேண்டும். இதை கெட்டியான பதத்தில் தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக் கொள்ள வேண்டும். 
 


3. நான்-ஸ்டிக் தவாவை  சூடாக்கி, அதில் நெய் தடவ வேண்டும். தவாவில் இரண்டு கரண்டி மாவை சேர்த்து அதை தோசையாக வார்க்க வேண்டும்.  1 டீஸ்பூன் நெய் தோசையின் மீது சேர்த்து வேக வைக்க வாண்டும். 

 

4.சுமார் 4-5 நிமிடங்கள் மூடி வைத்து  வேக வைக்க வேண்டும். பின்னர், மறுபுறம், புரட்டிப்போட்டு  வேக வைக்க வேண்டும். 

 

5.கெட்ச்அப், ஹரி சட்னி, தேங்காய் சட்னி உடன் சீலாவை சூடாக பரிமாறலாம். 

 

மேலும் படிக்க