அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதுவும் மிக முக்கியமாக உணவு விஷயத்தில் இது பொருந்திப்போகும். 


அப்படியொரு செய்திதான் இது. சிலருக்கு சாக்கலேட் என்றால் பிடிக்கும். இன்னும் சிலருக்கு டார்க் சாக்கலேட் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுதான் இங்கு செய்தியே.


அண்மையில் ஹெர்ஷீஸ் நிறுவனத்தின் டார்க் சாக்கலேட்டுகளில் அதிகப்படியான லெட் மற்றும் காட்மியம் இருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


மாதவிடாய் காலத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குறையும். பொதுவாகவே சாக்லேட்டில் கலந்துள்ள கோகோ நறுமணமானது ஒரு இதமான வாசனையை வழங்கக்கூடியதாகும். டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் ஆண்டியாக்ஸிடண்டுகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள்,  மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் நேர்மறை ஆற்றலை கொண்டுள்ளன. இதன் நறுமணம், குறைந்த சர்க்கரை அளவு, அதன் ஒரு கசப்பு தன்மை போன்றன மனநிலையை இதமாக வைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  


இப்படியாக இதுவரை டார்க் சாக்கலேட் பற்றி நல்லவிதமாகவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இச்செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது.


2015ல் கேத்தரீன் பி போண்டோனோ என்ற ஊட்டச்சத்து நிபுணர் நியூட்ரிஷன் ரிவியூவ்ஸ் என்ற இதழில் ஒரு கட்டுரையை பதிவு செய்திருந்தார். அதில் டார்க் சாக்கலேட்டுகளில் உள்ள ஃப்ளாவானாய்ட்ஸ் ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும் என்றும் இதனால் நமது உடலில் ரத்த அழுத்தம் குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.


ஆனால் கன்ஸ்யூமர்ரிபோர்ட்ஸ்.ஆர்க் என்ற இதழில் வெளியான கட்டுரையில் டார்க் சாக்கலேட்டுகளில் ஆர்சனிக், காட்மியம், லெட், மெர்குரி ஆகியன இருப்பதாகவும் அதுவும் 28 விதமான டார்க் சாக்கலேட்டுகளில் இவை அளவுக்கு அதிகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.


இவை அளவுக்கு அதிகமாக இருந்தால் அது உடலுக்குப் பல்வேறு தீமைகளை செய்யும் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறு குழந்தைகள் இந்த சாக்கலேட்டுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஐக்யூ எனப்படும் மூளை செயல்பாட்டுத் திறனும் பாதிக்கப்படுகிறது. 


Ecotoxicology and Environmental Safety என்ற இதழில், வாழ்நாள் முழுவதும் அதிகமான அளவில் கேட்மியம் உட்கொண்டால் அது நாள்பட்ட சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.


அப்படியென்றால் என்ன செய்யலாம்?


நிமாமி அகர்வால் என்ற ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், பதப்படுத்தப்படும் எந்தவகை உணவும் ஆரோக்கியமானது அல்ல. சாக்கலேட்டாக இருந்தாலும் சரி மற்ற ஆரோக்கிய உணவு லேபிள் கொண்டவையாக இருந்தாலும் சரி. ப்ராசஸ்ட் என்றாலே அதில் ரசாயனம் அல்லது அபாயகரமான சேர்மானம் இருக்கிறது என்றே அர்த்தம். ஆனால் இன்றைய உலகில் பதப்படுத்தப்பட்ட உணவு என்பது தடுக்க இயலாத ஒன்றாக உள்ளது. அதனால் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பதையே நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


மேலும் உணவு பதார்த்தங்களை வாங்கும்போது அதன் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். இனிப்பான பதார்த்தங்கள் தேடும்போது பேரீசம்பழம், தேன் உபயோகியுங்கள். மெக்னீஸியம் தேவையென்றால் நட்ஸ் சாப்பிடுங்கள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ருசிக்காக அல்லாமல் சாப்பாட்டை முறைப்படுத்தினால் உணவே மருந்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.