தீபாவளி பண்டிகை நவம்பர் 12 தேதி மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி அன்று இனிப்பு பலகாரங்கள் பெருமளவில் செய்யப்படுகின்றன. அதில் முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த அதிரசம்.


அதிரசம்:


தீபாவளிக்கென தயாரிக்கப்படும் ஒரு  பாரம்பரிய தென்னிந்திய இனிப்பு வகை தான் இந்த அதிரசம்.  இந்த அதிரசம் அரிசி மாவு மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதிரசத்துக்கு சர்க்கரை பாகு கூட தயாரிக்கலாம். ஆனால் அதைவிட வெல்லப்பாகை சேர்த்து அதிரசம் தயாரிப்பது இந்திய மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கமாக இருக்கிறது.


இந்த அதிரசத்திற்கான கலவையை தயாரிப்பது மிகவும் இலகுவானது. ஆனால் சிலருக்கு அதிரச உருண்டைக்கான பதம் சரியாக வராததினால் அதனை முயற்சிப்பதை கைவிட்டு விடுகின்றனர். ஆகவே இந்த குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் எளிதாக அதிரச பதத்தை நாம் செய்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


பச்சை அரிசி - 1 கிலோ (பச்சரிசி)
வெல்லம் - 3/4 கிலோ
ஏலக்காய் - 6
ஆழமாக வறுக்க எண்ணெய்


செய்முறை:


முதலில் அதிரசத்திற்கு பச்சரிசி மாவை தயார் செய்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அதிலும் கடையில் கிடைக்கும் சாதாரண அரிசி மாவை பயன்படுத்தி இதனை தயாரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில் பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.


பின்னர் 2 மணி நேரம் கழித்து தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி ஒரு துணியில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். இது அரிசியில் உள்ள அதிகப்படியான நீரை உறிஞ்சி எடுக்கும்.


சுமார் பத்து நிமிடங்களுக்கு பிறகு அரிசியை அரைக்க தொடங்க வேண்டும். அரிசியை நன்கு மாவாக அரைக்க கூடாது. அரிசி குருனல் இருக்கும் வகையில் பச்சரிசி மாவு செய்யப்பட வேண்டும். இந்த பச்சரிசியை அரைக்கும் போது  ஏலக்காயையும் சேர்த்து தூள் செய்து விடலாம்.


பின்னர் அரைத்த பச்சரிசி மாவை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவும். இந்த அதிரசத்திற்கான மாவை நாம் முழுமையாக அதற்கு பயன்படுத்த வேண்டும். ஓரளவு நன்றாக அரைபட்ட மாவு ,அடுத்தது முழுவதுமாக நன்கு அரைத்த மாவை , இரண்டையும் சேர்த்து செய்யும் போது அதிரசம் மிகவும் சுவையாக இருக்கும்.


பச்சரிசி மாவு வீட்டில் அரைக்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள மாவு மில்லில் கொடுத்து பதத்திற்கு அரைத்து எடுக்கலாம்.


பின்னர் வெல்லத்தை நன்கு துருவி அதில் போதுமான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தொடர்ந்து வெல்லம் கலந்த தண்ணீரை அகண்ட கடாயில் கொதிக்க வைத்து அதில் உள்ள கழிவுகளை வடிகட்டி எடுக்கவும்.


பின்னர் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை, அதாவது வெல்லப்பாகு நன்கு பதத்துக்கு வரும் வகையில் காய்ச்ச வேண்டும்.


ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் வெல்லப்பாகு ஊற்றி பதத்திற்கு வந்திருக்கிறதா இல்லையா என சோதனை செய்து பார்க்கலாம்.


இந்த வெல்லப்பாகு நன்கு கெட்டியாகும் வரை காய்க்க வேண்டும். இதில் ஒரு டீ ஸ்பூன் தண்ணீரில் விடும் போது அது உருண்டையாக அடியில் தங்கிவிடும். அவ்வாறு அது கெட்டியாகவில்லை என்றால் வெல்லப்பாகு நீரில் கரைந்து விடும் .ஆகவே கெட்டியான பதத்திற்கு வரும் வரையிலும் நன்கு காய்க்க வேண்டும்.


அதிரசம் செய்வதற்கான முதல் படியாக வெல்லப்பாகு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும்.


பின்னர் காய்ந்த கெட்டியான வெல்லப்பாகை, அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொள்ள வேண்டும்.
அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவு சூடான வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறிக்கொள்ள வேண்டும். அத்துடன் நெய் ஏலக்காய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். 


வெல்லப்பாகையும் பச்சரிசி மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து  ஒரு மூடியால் மூடிவிட்டு சுமார் 4,5 மணி நேரம் கழித்து  மீண்டும் வெளியே  எடுத்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இறுக்கமான மூடியால் மூடி வைக்க வேண்டும்.


இந்த பச்சரிசி மாவு மற்றும் வெல்லப்பாகு கலந்த இந்த அதிரச கலவையை ஒரு நாள் அப்படியே விட்டு வைக்க வேண்டும்.


பின்னர்  மறுநாள் மூடி வைத்துள்ள மாவை திறந்து மீண்டும் நன்கு பிசைய வேண்டும். கையில் ஒட்டாத வகையில் சற்று எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் நன்கு பிசைந்த அதிரச மாவு கலவையிலிருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இதற்கிடையே கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.


வாழை இலை அல்லது பூவரச இலை அல்லது பெரிய இலை வகைகளை தேர்வு செய்து அதில் பிடித்து வைத்திருக்கும் அதிரச மாவு உருண்டைகளை  வைத்து தட்டையாக, வட்ட வடிவமாக
தட்டிக் கொள்ளவும். 


இவ்வாறு இலையில் வட்ட வடிவமாக தட்டி வைத்திருக்கும் அதிரச உருண்டைகளை கடாயில் உள்ள சூடான எண்ணெயில் போட்டு நன்கு  பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி கொள்ளவும்.


தற்போது அதிரசம் தயாராகிவிட்டது. இதனை ஒரு பாத்திரத்தில் நன்கு காற்று புகாத வகையில் அடைத்து வைத்து பரிமாறிக் கொள்ளலாம்.


குறிப்பு:


இந்த அதிரசம் மாவுக்கான செய்முறை  ,உருண்டை  பதத்தை வழங்கவில்லை என்றால் , பிசைந்த மாவு மிகவும் தளர்வாக இருந்தால் உருண்டைகளை செய்ய முடியாவிட்டால் அதில் சிறிது கோதுமை மாவை கலந்தால் பதத்துக்கு வந்து விடும்.


 அல்லது பிசைந்த மாவு  மிகவும் இறுக்கமாக இருந்தால், அதில் சிறிது வெல்லம் அல்லது சிறிது பால் சேர்த்து நன்கு பிசைந்து பதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.


இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அரிசி மாவில் வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக கரண்டியால் சேர்த்து பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும். ஆக வெல்லப்பாகில் அரிசி மாவை  கலக்கக்கூடாது. ஆகவே இந்த தீபாவளிக்கு அதிரசம் செய்யும் முறையை பின்பற்றி சுவையான அதிரசத்தை செய்து தீபாவளியை குடும்பத்தோடு கொண்டாடலாம்.