மாரடைப்பு:


நமது உடலில் கொழுப்புப்படலம் அதிகமாகும் போதோ, வேறு பல காரணங்களாலோ நாளத்தின் சுவரில் இருந்து பிரிந்து நாளத்தை அடைத்து, இரத்த ஓட்டத்தை முழுமையாக தடைபடுத்துகிறது. இதனால் இரத்த நாளத்தில் மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்தம் நின்று விடுகிறது. அப்போது இதயத்தின் திசுக்கள் இரத்தம் இன்றி பாதிக்கப்பட்டு இறக்க  நேரிகிறது. இதனைத்தான் மாரடைப்பு என்கிறோம்.


யாருக்கெல்லாம் எதனால் ஏற்படுகிறது? 


மாரடைப்பு என்றால் பொதுவாக முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் வரும். அதிகமாக மாரடைப்பால் வயது முதிர்ந்தவர்களே உயிரிழந்தது உண்டு. ஆனால் இப்போது 30 முதல் 40 வயது உள்ளவர்கள் மட்டுமின்றி 20 வயது 25 வயது உடைய இளைய தலைமுறைகளும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதே போல மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டால் மற்றவருக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது எப்போது ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி பலருக்கு எழுகின்றது. இது எப்போது ஏற்படுகிறது என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.


அதிக தூரம் நடந்து செல்லும் போதோ, அதிகமாக படியேறும் போதோ உடலளவில் கடுமையான செயல்களில் ஈடுபடும் போதோ, மன அழுத்தத்தில் இருக்கும் போதோ  நெஞ்சுவலி ஏற்படுகிறது. குறிப்பாக சிலருக்கு நெஞ்சுவலி ஏற்படும் போது ஓய்வு எடுத்தாலே நெஞ்சுவலி குறைந்து விடும். ஆனால் ஒரு சிலர் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போதே நெஞ்சுவலி ஏற்படலாம். இந்த நிலை மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.  இதற்கு அறிகுறிகளாக நெஞ்சில் லேசான வலி ஆரம்பித்து பின் அது படிப்படியாக தாடை, கை, கழுத்து எனவும், சில நேரங்களில் முதுகு வரையிலும் பரவக்கூடும்.


வலியானது தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உடலை கவனிக்க வேண்டியது கட்டாயம். அதே நேரம்  நெஞ்சுவலி இருக்கும்  ஒருவருக்கு  மாரடைப்பு வருவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால் அதனை அவர்கள் சரியாக கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.


வராமல் தடுக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்: 


* பச்சைக்காய்கறிகளான பிரக்கோலி, கீரைகள், குடைமிளகாய் போன்றவற்றில் வைட்டமின் ஏ, சி, பி விட்டமின்ஸ் என இதயம் ஆரோக்கியமாக இருக்க சத்துகள் அதிகமாக உள்ளது. மேலும் எந்த ஒரு பச்சைக்காய்கறிகளிலும் நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை  கரைத்து இரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கும்.


தினமும் சாப்பிடும் உணவில் பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.


*பெர்ரி பழங்களான புளூபெர்ரி, ஸ்டாபெர்ரி போன்ற பழங்கள் இருதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், இதயம் சார்ந்த  பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் பெர்ரி பழங்கள் மிகவும் உதவியாக உள்ளது.


* அசைவ உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு மீன்.  இதில் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இது இதய குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து  நல்ல கொழுப்பு அமிலங்களின் அளவை அதிகரிக்கிறது.  


* பீன்ஸ் வகைகள் பல உள்ளது. அதை எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது.  இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.


* ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். 


* மாதுளை இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தை குறைத்து  இரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரியவும் உதவுகிறது.


* பாதாம், வால்நட் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள் போன்ற சத்துக்கள் உள்ளது.


* இதயத்தின் நண்பன் என்று சொல்லக்கூடிய பூண்டிலும், வெந்தயத்திலும் இதயத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது. இது போன்ற இயற்கையான இதய ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்..