கோடைக் காலம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முக்கனிகளில் ஒன்றான மாம்பழங்கள்தான். கோடையில் பலருக்கும் இது மிகவும் பிடித்தமான பழமாக இருந்தாலும், மாம்பழங்களைச் சாப்பிட்டால் உடலில் சூடு அதிகரிக்கும் என்ற ஒரு பொதுவான நம்பிக்கை காலம் காலமாக நம்மிடையே இருந்து வருகிறது.

Continues below advertisement

மாம்பழங்கள் சாப்பிடுவதால் உடல் சூடாகும். முகப்பருக்கள் தோன்றும், தோல் பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் வயிறு சம்பந்தமான செரிமானக் கோளாறுகள் வரும் என்றும் பலரும் கருதுகின்றனர். இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது?

நிபுணர்கள் விளக்கம்

இதுகுறித்து சுகாதார மற்றும் உணவுசார் நிபுணர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியவை. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

Continues below advertisement

அதே நேரத்தில், மாம்பழங்கள் உடலில் தெர்மோஜெனீசிஸ் (Thermogenesis) எனப்படும் லேசான வெப்ப உற்பத்தியை ஏற்படுத்துகின்றன என்பது அறிவியல்பூர்வமான உண்மைதான். உணவு செரிமானமாகும்போது அவை உடலின் வெப்பநிலையை சற்று உயர்த்துவதே இதற்குக் காரணமாகும். இருப்பினும், மாம்பழங்களை முற்றிலும் சூட்டைக் கிளப்பும் உணவு என்று ஒதுக்கிவிட முடியாது.

எளிய வழிமுறை

மாம்பழங்களைச் சாப்பிடும்போது உடல் சூடு அதிகரிப்பதைத் தடுக்க, நம் வீடுகளில் பெரியவர்கள் ஒரு எளிய வழிமுறையைப் பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். அதாவது, மாம்பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பாக சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைப்பது. இந்தப் பாரம்பரிய முறையை நவீன நிபுணர்களும் வலுவாகப் பரிந்துரைக்கின்றனர்.

தண்ணீரில் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை மாம்பழங்களை ஊறவைப்பதால், அவற்றின் வெப்பத்தைத் தூண்டும் தன்மை கணிசமாகக் குறைகிறது. அதுமட்டுமின்றி, பழங்களின் தோலில் இயற்கையாகவே காணப்படும் பைட்டிக் அமிலம் எனப்படும் நுண் சத்துக்களை உறிஞ்ச விடாமல் தடுக்கும் பொருளும், ரசாயன பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களும் முழுமையாக நீங்குவதற்கு இந்த முறை பெரிதும் உதவுகிறது. இதனால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன.

அதிக சர்க்கரை, கலோரிகள்

எந்தவொரு உணவாக இருந்தாலும் அதனை அளவோடு சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். மாம்பழங்களில் இயற்கையாகவே சர்க்கரைச் சத்து மற்றும் கலோரிகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது, செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல் எடை கூடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாம்பழங்களை நன்றாகத் தண்ணீரில் ஊறவைத்து, அளவோடு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறித்த எவ்வித அச்சமும் இன்றி, அதன் சுவையையும் சத்துக்களையும் நாம் முழுமையாகப் பெற முடியும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.