கொரோனா லாக்டவுன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தீபாவளியைக் கொண்டாட உள்ளனர். இந்த ஆண்டு மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் நிலையில்  ஆர்வத்துடன் கொண்டாடும் வகையில் வீடுகளை அலங்கரிக்கும் விளக்குகள் மற்றும் வானத்தை ஒளிரச் செய்யும் பட்டாசுகள் என ஏகபோகத்துக்கு விற்பனையாகி வருகின்றன. இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் இந்த ஆண்டு பசுமைப் பட்டாசுகளை (Green Crackers) பயன்படுத்த அனுமதி அளித்து அரசு ஒப்புதல் அளித்து வருகின்றது. டெல்லியில் அக்டோபர் முதல் வாரத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


CSIR-NEERI சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் சண்டிகர் நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை  பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சண்டிகர் போல, சத்தமில்லாத, புகை இல்லாத, பசுமையான மற்றும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக அரசு மக்களை வலியுறுத்தியுள்ளது. எனவே பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.


பாரம்பரிய பட்டாசுகளிலிருந்து பசுமை பட்டாசுகள் எவ்வாறு வேறுபடுகின்றன?


கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகையையொட்டி பசுமை பட்டாசுகள் பற்றிய அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு அதிகரிப்பதை தடுக்கும் வகையில், பல மாநிலங்கள் தங்கள் குடிமக்கள் பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்துள்ளன, இருப்பினும், குறைந்த மணிநேரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பசுமை பட்டாசுகள் 2018ம் ஆண்டில் CSIR-National Environment Engineering Research Institute (NEERI) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. பசுமை பட்டாசு கொள்கையின்படி, அரசிடம் பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எளிமையான வகையில் உருவாக்கப்படும், பச்சை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, அவை பாரம்பரிய பட்டாசுகளிலிருந்து வேறுபட்டவை மற்றும் தனித்துவமானவை.


பசுமை பட்டாசு என்றால் என்ன? அவை எதனால் ஆனவை?


பசுமை பட்டாசுகள் மாற்று மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, அவை சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனிதர்களுக்கு குறைவான சுகாதார அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. பாரம்பரிய பட்டாசுகளைப் போலல்லாமல், பசுமைப் பட்டாசுகளில் அலுமினியம், பேரியம், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது கார்பன் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை, இதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை இது குறைக்கிறது.




பசுமைப் பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா?  பாரம்பரிய பட்டாசுகளை விடக் குறைவான மாசு ஏற்படுத்துமா?


பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்துவதால், பட்டாசுகளில் இருந்து மாசு குறைவாக வெளிவருகிறது, இதனால் காற்று மாசு குறைகிறது. பாரம்பரிய பட்டாசுகளை விடப் பசுமைப் பட்டாசுகள் மாசு 30 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒப்பிட்டு அளவில், ​​பசுமைப் பட்டாசுகள் 110-125 டெசிபல் ஒலி அளவைக் கொண்டிருக்கின்றன, இது 160 டெசிபல் ஒலியை வெளியிடும் பாரம்பரிய பட்டாசுகளை விட மிகக் குறைவு.


பசுமைப் பட்டாசுகளை எவ்வாறு அடையாளம் காண்பது?


பசுமைப் பட்டாசுகள் பாரம்பரியப் பட்டாசுகளிலிருந்து வேறுபட்டு இருப்பதால் அவற்றை அடையாளம் காண்பது மிகவும் எளிமையானது , சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பட்டாசுகளை CSIR NEERI லோகோவைப் பயன்படுத்தி அடையாளம் காண முடியும்.


பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாடும் வகையில், அரசுப் பதிவு செய்யப்பட்ட கடையில் பசுமைப் பட்டாசுகளை வாங்கலாம்.