கிராமங்களில் முருங்கை மரமும் வேப்ப மரமும் இல்லாத வீடுகளே முன்னர் இருக்காது. ஆனால், காலப்போக்கில் சிலர் சொல்வதை கேட்டுக்கொண்டு முருங்கை மரங்களை வெட்டி வீசியவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, முருங்கை மரம் வீட்டில் இருந்தால் அதில் பேய், பிசாசு குடியிருக்கும் என்று யாரோ சொன்னதை பிடித்துக்கொண்டு பலரும் முருங்கை மரம் வைப்பதற்கு பயந்த கதைகள் கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமாக இருக்கின்றன.

Continues below advertisement

முருங்கை மரம் வைத்தால் பேய் அதில் ஏறி குடியிருக்குமா?

விண்வெளிக்கு ராக்கெட் விட்டிருந்த காலம் போய் அங்கேயே மனிதன் சென்று குடியிருப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் பலர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை நம்பி ஏமாந்துபோயிருக்கின்றனர். அதிலும் முருங்கை மரத்தில் பேய் குடியிருக்கும் என்று சொல்லி வைக்கப்பட்ட பொய்யை நம்பி பலரும் வீட்டில் முருங்கை மரம் வைக்கவே அச்சப்பட்டு இருக்கின்றனர். அதற்கு காரணம், விக்கிரமாதித்தியன் கதைகளில் வேதாளம் முருங்கை மரத்தில் குடியிருக்கும் என்று சொல்லப்பட்டதுதான். அதன் தொடர்ச்சியாக வேதாளம், பேயாகி, பின்னர் பிசாசு ஆகி மோகினி, யட்சி என பல ஊர்களில் பல பெயர்களில் இல்லவே இல்லாத உருவத்தை முருங்கை மரத்தில் ஏற்றி பலர் அச்சமடைந்துள்ளனர். உண்மையில், முருங்கை மரம், புளியம் மரம் என எந்த மரத்திலும் பேய் குடியேறாது என்பதுதான் உண்மை. அதனினும் உண்மை பேய் என்ற ஒன்றே கிடையாது என்பது.

Continues below advertisement

முருங்கை மரமும் பசு மாடும்

எனவே, உடலுக்கு சத்துக் கொடுக்கும் முருங்கை மரத்தை தாராளமாக வீடுகளில் வைக்கலாம். ஆனால், அதில் அதிகமாக பூச்சிகள் தாக்கும் என்பதால் ஜன்னலோரம் அல்லது கதவு அருகே முருங்கை மரத்தை வைக்கக் கூடாது. அதற்கு பதில் வீட்டு வேலியோரத்திலோ, வீட்டிற்கு சற்று அருகிலோ தாரளமாக முருங்கை மரத்தை நட்டு வளர்க்கலாம். முருங்கை மரமும் பசுமாடும் இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும் என்ற முதுமொழி இருக்கிறது. அதற்கு காரணமும் முருங்கை கீரை, தண்டு உள்ளிடவைகளை வைத்து சமைத்துக்கொள்ளலாம் என்பதும் பசுமாட்டின் பாலை குடித்தும், அதை விற்றும் தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதும்தான். ஒரு குடும்பத்தையே வாழ வைக்கும் முருங்கை மரத்தை போய் பேய் குடியிருக்கும் வீடு மாதிரி யாரோ சிலர் சித்தரித்தது இன்றும் பலரது நெஞ்சில் அச்சமாக மாறிக்கிடக்கிறது.

அதோடு, வேப்பம் மரம் வைப்பதிலும் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால், வேப்பம் மரம் வீடுகளில் வளர்ப்பது அவ்வளவு நல்லது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காற்றை சுத்தப்படுத்தி தருவதிலும், அதன் இலையை அரைத்து பய்ன்படுத்தினால் கிருமி நாசினியாகவும் பயன்படும் வல்லமை கொண்டது இந்த வேப்பமரம். அதோடு, தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மரமாக இருக்கும் வேப்பம் மரத்தையும் எந்த தயக்கமும் இன்றி வீடுகளில் வளர்க்கலாம்.