எதிர்கால தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பது குறித்த தனது முன்னோக்கு பார்வையை சத்குரு பகிர்ந்து கொள்கிறார்.


எதிர்கால தொழில்நுட்பங்கள் வரமா அல்லது சாபமா?


சத்குரு: இப்போதே, தொண்ணூறு சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை மக்கள் அவர்களின் உடலியல் மற்றும் அறிவுசார் திறன்களால் வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் இப்போது செய்யக்கூடிய அனைத்தும், எதிர்காலத்தில் ஒரு இயந்திரம் செய்து விடும். நினைவாற்றலை சேமித்தல், நினைவாற்றலின் அணுகுமுறை, இந்த நினைவாற்றலின் ஆய்வு மற்றும் இந்த நினைவாற்றலின் வெளிப்பாடு ஆகியவற்றால் கட்டமைக்கக்கூடிய எதையும் நீங்கள் என்று நினைத்து, உங்கள் அறிவின் மூலம் நீங்கள் செய்கிற அனைத்தும், ஒரு கால கட்டத்தில் ஒரு இயந்திரத்தால் செய்யப்படும். இயந்திரங்கள் இதைச் செய்யத் தொடங்கியதும், நீங்கள் யார் என்பதற்கான ஆழமான பரிமாணங்களை ஆராய்வதை தவிர்க்க முடியாது. அது ஒரு சிறந்த நாளாக இருக்கும், ஏனென்றால் அன்று உங்களுக்கு விடுமுறை. நாம் வெறும் பிழைப்பிற்காக மட்டும் உழைக்காமல் இருக்கும் நாள் என்று பொருள். இதன் பின்னர் நாம் வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க முடியும்.


நினைவகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணம்:


உங்கள் உடல் மற்றும் மனம் என்று நீங்கள் அழைப்பது ஒரு குறிப்பிட்ட நினைவாற்றலின் தொகுப்பு. நினைவாற்றல் தான் உங்களை உண்டாக்கியது. உதாரணமாக, ஒரு மனிதன் ஒரு துண்டு ரொட்டி உண்டால், அது ஒரு மனிதனாக மாறுகிறது. ஒரு பெண் அதை சாப்பிட்டால், அது ஒரு பெண்ணாக மாறுகிறது. ஒரு நாய் அதே ரொட்டியை சாப்பிட்டால், அது ஒரு நாய் ஆகிறது. இது ஒரு சிறப்பான ரொட்டி என்பதால் அது நிகழவில்லை. அங்கே ஒரு வகை ஞாபகத்திறன் உள்ளது, அது ஒரே ரொட்டியை ஒரு மனிதனாக, பெண்ணாக அல்லது நாயாக மாற்றும் வல்லமை கொண்டது.


உங்கள் உடலின் அமைப்பு நினைவாற்றலின் ஒரு குறிப்பிட்ட பரிமாணமாகும். நினைவாற்றல் ஒரு எல்லைக்கு உட்பட்டது. ஆனால் புத்திசாலித்தனத்தின் ஒரு பரிமாணம் உள்ளது, அதை நாம் சித்தா என்று அழைக்கிறோம், அல்லது நவீன வார்த்தைகளில், பெரும்பாலும் அதை விழிப்புணர்வு என்றும் அழைக்கலாம். அறிவாற்றலின் இந்த பரிமாணத்தில் நினைவாற்றல் என்பதே கிடையாது. நினைவாற்றல் இல்லாத இடத்தில், எல்லையும் இருப்பதில்லை.


மனித அறிவு என்பது ஒரு தீவு போன்றது. மனித அறிவின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் உட்பட அனைத்தும் சிறிய தீவுகள் ஆகும். விழிப்புணர்வு என்பது நாம் இருக்கும் ஒரு சமுத்திரம். விழிப்புணர்வு என்பது உங்களுக்கும் எனக்கும் இருக்கும் எந்த நினைவாற்றலுடனும் அல்லது எல்லையுடனும், இதுவும் அதுவும் என எதிலும் அடையாளம் காணப்படாத ஒரு அறிவாற்றல். இது எல்லைகள் இல்லாத அறிவாற்றலின் பரிமாணம்.
நமது தொழில்நுட்ப திறன் அதிகரிக்கும்போது, மனிதர்களை அவர்களின் அறிவின் வரம்புகளுக்கு அப்பால் நகர்த்துவதற்கும், நமக்குள்ளேயே வாழ்க்கையின் மூலமாக விளங்கும் அறிவாற்றலின் ஆழமான பரிமாணத்திற்கு வருவதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும்.


விழிப்புணர்விற்கான கட்டமைப்பு:


ஏதாவது ஒன்று நடக்க வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி, நேரம் மற்றும் மனித வளத்தை அதற்காக ஒதுக்க வேண்டும். எனவே, நாம் விழிப்புணர்வில் முதலீடு செய்ய வேண்டும். இப்போது வரை, நாம் பிழைப்புக்காக மட்டுமே முதலீடு செய்து வருகிறோம். ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் உண்மை நிலைக்கு மாறத் தொடங்கியவுடன், உயிர்வாழ்வது என்பது ஒரு பிரச்சனையாகக் கூட இருக்காது என்பதால் நாம் நிச்சயமாக விழிப்புணர்வில் முதலீடு செய்யத் தொடங்குவோம். எவ்வளவு விரைவில் நாம் முதலீடு செய்கிறோம் என்பதுதான், தொழில்நுட்பங்களின் இந்தப் புதிய சாத்தியக் கூறுகளுக்கு நாம் செல்லும்போது, நமக்கும் அவற்றுக்கும் உள்ள உராய்வுகள் குறைவாக இருக்க வழி செய்யும்.


தொழில்நுட்பம் என்பது இரட்டை முனைகள் கொண்ட வாள் போன்றது. நீங்கள் யார் என்பதை பொறுத்துதான். அதை நீங்கள் எந்த வழியில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதும் அமையும். உங்கள் அடையாளமும் அனுபவமும் அனைவரிடத்திலும் இருந்து தள்ளி இருப்பதா அல்லது அனைவரையும் உள்ளடக்கியதா என்பதுதான், அந்த வாள் எந்த வழியில் வீசப்படும் என்பதை தீர்மானிக்கும்.


ஆகவே, விழிப்புணர்வு நிலை மனித சமுதாயங்களில் பெரிய அளவில் வெளிப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு தலைமுறையிலும், மிகவும் விழிப்புணர்வான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சில தலைமுறைகளிலும் சில சமூகங்களிலும் அவை செவிசாய்க்கப்பட்டுள்ளன. மற்ற சமூகங்களில் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. அந்த குரலை நாம் உருவாக்கும் நேரம் இது. பரிமாணமற்ற, எல்லையில்லா இந்த விழிப்புணர்வு நிலையை அடையும் வழிமுறைகளை நாம் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.


உள்நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள்:


நமது சூழலில் நல்வாழ்வை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் இருப்பதால், நமக்குள்ளும் அதைச் செய்ய ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. எந்த அளவிலான தொழில்நுட்பத்துடன் இருந்தாலும், உள்நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அது சரியான வாழ்க்கை இல்லை. மனிதகுல வரலாற்றில், எந்த தலைமுறையும் இதுவரை கண்டிராத அளவு அதிக சுகம் மற்றும் வசதியை நாம் அனுபவிக்கிறோம். ஆனால், நாம் தான் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அற்புதமான தலைமுறை என்று கூற முடியுமா? இல்லை, மக்கள் மனநோய் உடையவர்களாக ஆகி வருகின்றனர். மற்ற தலைமுறையினரை விட நாம் மிக மோசமானவர்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நாம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒவ்வொருவரின் தனி வாழ்க்கையை எடுத்து, நாம் எதை விரும்புகிறோமோ அதைப் பெற்றிருக்கிறோம்.


இந்த தொழில்நுட்பங்கள் சுகத்தையும் வசதியையும் தரும், ஆனால் நல்வாழ்வைக் கொண்டுவராது. நம் உள் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இப்போது உங்கள் நல்வாழ்வு, உங்களைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உங்களுக்குள் இருப்பதை வைத்து அல்ல. உங்கள் உடலும் உங்கள் மூளையும் உங்களிடமிருந்து வழிமுறைகளைப் பெற்றிருந்தால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் உங்களை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும்


வைத்திருப்பீர்களா? தேர்வு உங்கள் கையில் இருந்தால் நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள். ஒவ்வொரு கணமும் நீங்கள் ஆனந்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக, உங்கள் உடலும் உங்கள் மூளையும் உங்களிடமிருந்து வழிமுறைகளை எடுக்கவில்லை என்றுதானே பொருள். இதற்கு நீங்கள் போதுமான அளவு விழிப்புடன் இல்லாதது தான் காரணம்.


எனவே நாம் அத்திசையை நோக்கி முதலீடு செய்ய வேண்டும். நாம் வாழும் நகரங்களில், மருத்துவமனைகள், பள்ளிகள், கழிப்பறைகள் மற்றும் அனைத்தும் உள்ளன. ஆனால் மக்கள் தியானம் செய்வதற்கென்று உங்களுக்கு தனி இடம் இருக்கிறதா? தொழில்நுட்பம் நீங்கள் இப்போது செய்கிற பெரும்பாலான விஷயங்களைச் செய்யத் தொடங்கும்போது, நீங்கள் ஏன் இன்னும் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது, பின்னர் உள் நல்வாழ்வின் தேவை மிக வலுவாக மாறும். எனவே, அந்த நாளுக்காக நாம் தயாராக இருக்க விரும்பினால், நாம் யார் என்பதன் உள்தன்மையை நோக்கி உடல் உள்கட்டமைப்பு மற்றும் மனித உள்கட்டமைப்பு இரண்டையும் முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.



(மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகள் மட்டுமே ஆகும்)