திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி, பட்டம் படிப்பு தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவு தாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40-வயதுக்குள் இருக்க வேண்டும்.


 




 


 உதவி தொகை தகுதி 


குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் எழுபத்தி இரண்டாயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை, ஒரு பதிவு தாரருக்கு ஒரு முறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ 300, மேல்நிலை கல்வி முடித்தவர்களுக்கு ரூ 400 , பட்டதாரிகளுக்கு ரூ 600 என வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ 600 மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ 750 பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.


மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பெறப்பட்ட விண்ணப்பித்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேற்கண்ட படிவத்தில் வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று 31-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ் தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் நேரில் வருகை தந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.