மேலும் அறிய
ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களே.. சூரிய மின் பலகை பயிற்சி உடன் ரூ.30,000 ஊதியம் - உடனே விண்ணப்பியுங்கள்!
உள்ளே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

சோலார் பயிற்சி
Source : whatsapp
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training) பெறுவதற்கு, www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தாட்கோ, டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியினை (Solar Panel Installation Technician training) வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியினை பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராகவும், 18 முதல் 32 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள், இப்பயிற்சியினை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
மேலும், இப்பயிற்சிக்கான 45 நாட்கள் கால அளவு , சென்னையிலுள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவு ஆகியவைகளுக்கான செலவினத்தொகை டாக்டர் ரெட்டி நிறுவனம் சார்பில் வழங்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18,000- முதல் ரூ.30,000- வரை கிடைக்க வழிவகை செய்யப்பபடும். அதுமட்டுமன்றி, வேலை வாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். எனவே, குறிப்பிட்டுள்ள பயிற்சியினை பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























