புதுச்சேரிக்கு மெகா அறிவிப்பு: 2-வது ஐ.ஆர்.பி.என் பட்டாலியனுக்கு ஒப்புதல்; 1007 பேருக்கு அரசு வேலை!
சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும், பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn - Indian Reserve Battalion) அமைக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும், பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn - Indian Reserve Battalion) அமைக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் புதிதாக 1,007 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக முதல்வர் என். ரங்கசாமி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2003ம் ஆண்டில், ஜனாதிபதி அனுமதியோடு, புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன்(ஐ.ஆர்.பி.என்) உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு 2004ம் ஆண்டில், அந்தப் பட்டாலியனுக்காக பல்வேறு நிலைகளில் மொத்தம் 1,007 பணியிடங்களை உருவாக்கியது. அதில், தற்போது, 896 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மக்கள்தொகை அதிகரிப்பு, விமான நிலைய உள்கட்டமைப்பு விரிவாக்கம், விரைவான தொழில்துறை வளர்ச்சி, சுற்றுலா நடவடிக்கைகளின் உயர்வு மற்றும் கடலோரப் பாதுகாப்பு தேவைகள் போன்ற பல்வேறு காரணங்களால், போலீஸ் துறை மனிதவளத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு, போலீஸ் துறைப் பணியாளர்களின் பற்றாக்குறையை தணிக்கும் வகையில் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரைத்தார். அதனடிப்படையில், ஆளுநர் முன் அனுமதியுடன், புதுச்சேரியில், 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியனை அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்தாண்டு உள்துறை அமைச்சகத்திற்கு விரிவான திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தது. புதுச்சேரி அரசால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முன்மொழிவு மத்திய அரசால் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கடந்த 15ம் தேதி கடிதத்தின் மூலம் இது தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2வது இந்திய ரிசர்வ் பட்டாலியனை நிறுவுவதற்காக ஒருமுறை நிதியுதவி ரூ.50 கோடி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதனுடன், பட்டாலியனுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ரூ.30 கோடி வரை, நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, மத்திய அரசால் திருப்பிச் செலுத்தப்படும்.இரண்டாவது இந்திய ரிசர்வ் பட்டாலியன் உருவாக்கப்படுவதன் மூலம், பல்வேறு நிலைகளில் 1007 பணியிடங்கள் உருவாகும். உள்ளூர் இளைஞர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Before You Go
Job Recruitment : மாதம் ரூ.1லட்சம் வரை சம்பளம்..! விண்ணப்பிப்பது எப்படி..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















