JIPMER: 500+ வேலை வாய்ப்பு... ஜிப்மர் மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு
ஜிப்மர் மருத்துவமனையில் 557 புதிய பணியிடங்களை உருவாக்கவும், அதனை விரைவில் நிரப்பவும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி.

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் 557 புதிய பணியிடங்களை உருவாக்கவும், அதனை விரைவில் நிரப்பவும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) இந்தியாவின் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு மருத்துவ கல்லூரி ஆகும். ஜிப்மர் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு பரிந்துரை மருத்துவமனையாகும். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மட்டுமின்றி, காரைக்காலிலும் கிளை அமைந்துள்ளது. அடுத்து மாஹி, ஏனாம் பகுதியில் ஜிப்மர் கிளை துவங்க ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் புதிய மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்து, அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பியுள்ளது.
557 காலிப்பணியிடங்கள் நிரப்ப முடிவு
மொத்தம் 947 பணியிடங்களை புதிதாக உருவாக்க கோப்பு அனுப்பப்பட்டதில், 557 பணியிடங்களை உருவாக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 400 செவிலியர் அதிகாரி பணியிடங்களை உருவாக்க அனுமதி தந்துள்ளது. மேலும் 36 சீனியர் உள்ளிருப்பு மருத்துவர்கள் பணியிடங்களையும், 50 ஜூனியர் உள்ளிருப்பு மருத்துவர்கள் பணியிடங்களையும் புதிதாக உருவாக்க அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், ஜிப்மர் நிர்வாகம் அனுப்பிய சில முக்கிய பணியிடங்கள் உருவாகத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் நிராகரித்தும் உள்ளது. குறிப்பாக 35 உதவி பேராசிரியர் பணியிடங்களை புதிதாக உருவாக்க அனுமதி கேட்டிருந்தது. அதனை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதேபோல் 20 உதவி நர்சிங் கண்காணிப்பாளர், 100 சீனியர் நர்சிங் அதிகாரி பணியிடங்களை உருவாக்க அனுமதி கேட்கப்பட்டது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்டெனோகிராபர் கிரேடு-1ல் 4 புதிய பணியிடங்களும், ஸ்டேனோகிராபர் கிரேடு-2ல் 8 புதிய பணியிடங்கள் உருவாக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் 35 எம்.எல்.டி., பணியிடங்களை உருவாக்க அனுமதி கேட்டதில், 18 பணியிடங்கள் புதிதாக உருவாக்க அனுமதி தரப்பட்டுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டண்ட் 3, அனஸ்தீசியா டெக்னீஷியன் 10 உருவாக்க ஜிப்மர் நிர்வாகம் அனுமதி கேட்டதில், அனைத்து பணியிடங்களையும் புதிதாக உருவாக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி தெரிவித்துள்ளது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆண்டிற்கு 14 லட்சத்து 56 ஆயிரம் புற நோயாளிகளும், தினசரி 6 முதல் 7 ஆயிரம் நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். சிறந்த சிகிச்சை கிடைப்பதால் புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில நோயாளிகளும் குவிந்து விடுகின்றனர். அதிகரித்து வரும் நோயாளிகளை சமாளிக்க முடியாமல் மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளும் திணறிக்கொண்டு இருக்கின்றன. எனவே புதிய பணியிடங்களை விரைவாக நிரப்ப ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.





















