இந்திய இராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு போட்டித்தேர்வுகளுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க அழைப்பு


அக்னிவீர்


இந்திய இராணுவத்தால்  “அக்னிவீர்“ வாயு தேர்வுகள் இணையவழியில் 17.03.2024 முதல் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள 17.01.2024 முதல் ஆன்லைன் மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இணையவழி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் அக்னிபாத்வாயு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கான வயது வரம்பு மற்றும் தகுதிகள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்


அக்னிவீர் வாயு பணிக்கு ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்  அல்லது மூன்று வருட அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 கல்வி தகுதி


அறிவியல் பிரிவு அல்லாத பிற பிரிவு மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவுகளில் இடைநிலை/10+2/ சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது மத்திய, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இரண்டு வருட தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொழிற்கல்வி பாடத்தில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விருப்பமுள்ள மாணவர்கள் செய்ய வேண்டியவை


செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் இத்தேர்விற்கு இணையதளத்தில் 17.01.2024 முதல் விண்ணப்பித்து பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத்  தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.