"கடைசியா நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன், கடன், வட்டி, மிரட்டல்னு மனசு தாங்க முடியாம இருக்குறவங்க, தயவுசெஞ்சு தனியா அந்த முடிவை எடுக்காதீங்க." - மனநல ஆலோசகர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தற்கொலை சம்பவம்
மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த மகளின் திருமணச் செலவிற்காக, பிரேமா சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும், திருப்பதி, பகவதி, அங்கம்மாள் மற்றும் ஆகியோரின் பெயரிலும் கூடுதல் கடன் வாங்கி கொடுத்துவிட்டு அதற்கு கூடுதல் வட்டி கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டி தொகையை உடனடியாக தராவிட்டால் ஆடையை கலைந்துவிட்டுவிடுவேன், உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலை இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மனநல ஆலோசகர் ப.ராஜ செளந்தர பாண்டியன் நம்மிடம் தெரிவித்தது.
மனநல ஆலோசகர் கருத்து
"இந்த சம்பவத்த பத்தி கேள்விப்பட்டதும், முதல்ல என் மனசுல தோணுன விஷயம் என்னன்னா, இது ஒரு தனி பெண்ணோட பிரச்னை இல்ல. இது நம்ம சமூகத்துல அமைதியா நடந்துகிட்டே இருக்குற ஒரு பெரிய பிரச்னையோட ஒரு முகம். பாருங்க, பிரேமா தன் மகளோட திருமணத்துக்காக கடன் வாங்குனாங்க. ஒரு தாய், தன் பொண்ணோட கல்யாணத்துக்கு எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணணும்னு நினைக்குறது, இது எல்லா குடும்பத்திலயும் நடக்குற சகஜமான விஷயம்தான். அதுல எந்த தப்பும் இல்ல. ஆனா என்ன நடந்துச்சுன்னா, 2 லட்சம் கடன், 1.50 லட்சம் வட்டியா கட்டியும் அசல் தீரல. அப்புறமும் வட்டி தொடர்ந்து ஏறிக்கிட்டே இருந்துச்சு. இதுதான் கந்துவட்டி சிஸ்டமின் ரொம்ப ஆபத்தான பகுதி, எவ்ளோ கட்டினாலும் முடிவே இல்லாம போக செய்யுறது.
இதுல உளவியல் ரீதியா நடந்தது என்ன?
தொடர்ந்து ஒரு நாள் இல்ல, மாசக்கணக்கா, ஒவ்வொரு நாளும் கடன் மிரட்டல், அவமானம்ன்னு அழுத்தம் வந்துகிட்டே இருந்தா, அந்த நபரோட மனசு ஓய்வே இல்லாம தொடர்ந்து பயத்துல, டென்ஷன்ல இருக்கும். இதைத்தான் நாம 'Chronic Stress' அப்படின்னு சொல்றோம். அதாவது நீண்ட நாள் தொடர்ந்த மன அழுத்தம். இது மெதுவா அந்த நபரோட தன்னம்பிக்கையையும், தாங்கிக்கிற சக்தியையும் குறைச்சிடும்.
திடீர்னு எடுத்த முடிவு
நாம பொதுவா தற்கொலை பத்தி பேசும்போது 'திடீர்னு எடுத்த முடிவு' அப்படின்னு நினைச்சுக்குவோம். ஆனா உண்மையில, இது மாசக்கணக்கா சேர்ந்த அழுத்தம். அதுக்கு மேல 'சேலையை உருவி அடிப்பேன்' மாதிரி ஒரு பொது அவமான மிரட்டல் வந்தப்போ, அதுவே கடைசி தூண்டுதலா வேலை செஞ்சிடுச்சு. அந்த நிமிஷத்துல அந்த நபருக்கு 'இனி வேற வழியே இல்ல' அப்படின்னு தோணிடும்.
அது வாழ்க்கையையே மாத்தலாம்.
கடைசியா நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன், கடன், வட்டி, மிரட்டல்னு மனசு தாங்க முடியாம இருக்குறவங்க, தயவுசெஞ்சு தனியா அந்த முடிவை எடுக்காதீங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட பேசுங்க, Helpline-க்கு கூப்பிடுங்க, Legal Aid உதவி எடுங்க. ஒரு பேச்சு, ஒரு உதவி கை, அது வாழ்க்கையையே மாத்தலாம்.
