இன்றைய வாழ்வியல் சூழலில் பல்வேறு நோய்களில் கட்டுண்டு அதற்கு தீர்வு காணமுடியாமல் தவித்து வருகிறோம். வாயில் நுழையாத நோய்கள் எல்லாம் வாலிப வயதினரை தாக்குகிறது. இந்த வகையில் மூட்டு வலியும் ஒன்றுதான். மூட்டுவலி என்பது வயதானவர்கள் என்றில்லாமல் இன்றைய இளம் தலைமுறையினரையும் முடக்குகிறது. நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிபவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை இந்த மூட்டுவலி ஆட்டிப்படைக்கிறது. 


வயதானவர்களுக்கும் அதிகமாக இருப்பது மூட்டு வலி பிரச்சனை தான்.  உடலில் இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் அதிகமாக பாதிப்புகளை மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வுகள் சித்த மருத்துவ முறையில் அதிகம் உள்ளன. இதனை கடைபிடித்து மருத்துவமுறைகளை கையாண்டு வந்தால் சிறந்த தீர்வை காண முடியும். மூட்டு வலி என்பது எலும்புகளுடன் இருக்கும் ஜவ்வு தேய்ந்து போதல், கிழிந்து போதல் போன்றவை நேரிடுகிறது. மூட்டுகளுக்கு அரணாக இருக்கும் ஜவ்வு அதிகமாக சிதைவதற்கு  வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி செய்ய சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகளும் தீர்வுகளும் உள்ளன. 


இவை யாவும் எளிதாக தீர்க்க நம் கண்முன்னே தீர்வுகள் உள்ளன. ஆம்.... நாம் அன்றாடம் கண்டு கடந்து போன செடிகள் தான் நம்மை காக்கும் மூலிகைள் என்பதை அறியாமல் போகிறோம். அந்த வகையில், சில மூலிகைகள் நம் வீட்டு அருகே அல்லது வேலி ஓரங்களில் வளர்கின்றன இந்த பிணித்தீர்க்கும் மூலிகைகள். பிரண்டையில்,  மூட்டு வலிக்கான மருத்துவம் உள்ளது. 



எளிதாக கிடைக்கும் பிரண்டை,  கொடி வகையைச் சேர்ந்ததாகும். “சிஸ்ஸஸ் குவாடரங்குலாரிஸ்” என்ற தாவரவியல் பெயர் கொண்டது. பிரண்டைக்கும் எலும்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பார்ப்பதற்கு எலும்பின் அமைப்பு போலவே பிரண்டை காணப்படுகிறது. பிரண்டை உப்பு, பிரண்டை வற்றல், பிரண்டை இலை, பிரண்டைக்காய் என பல்வேறு விதமாக மூட்டுவலிக்கு பயன்படுத்தலாம்.  எலும்புகள் இணைந்துள்ள மூட்டுக் கிண்ணங்கள் கை கால்களை மடக்கும் இயக்கத்தை செய்கின்றன. இதன் பாதுகாப்பும் மிக அவசியம். இதற்கும் பிரண்டை மருத்துவம் சீராக்கி நலம் தருகிறது.


பிரண்டை மருத்துவ முறைகள்: எலும்புகளில் இணைப்பு பகுதிகளிலும், நரம்பு முடிச்சுகளிலும் வாயு சீற்றம் இருப்பதால் முதுகுவலி, கழுத்துவலி பிரச்சனைகளுக்கு பிரண்டை துவையல் உணவில் சேர்த்து சாப்பிட நல்ல தீர்வு காணலாம். எலும்புமுறிவு, அடிபட்ட வீக்கம், சுளுக்கு வலிகள் என உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேல் பிரண்டையை அரைத்து பற்று போட்டு வர நாளடைவில்  குணமாகும். அதே போன்று இதய பாதிப்பு உள்ளவர்கள் பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டு வர இரத்த ஓட்டம் சீராகும். 


வாய்ப்புண், வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு ஆகியவற்றுக்கு பிரண்டை உப்புடன் எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர நல்லத்தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் போன்றவற்றுக்கும் பிரண்டைக்காயில் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. பெண்களுக்கு  மாதவிடாய் கால பிரச்சனைகளால் ஏற்படும், மூட்டு வலி,  முதுகுவலி, இடுப்பு வலி போன்றவற்றுக்கு பிரண்டை துவையல் நல்ல பலனைத்  தரும். இதற்கு சத்தான உணவு, அளவான உழைப்பு என கடைப்பிடித்தல் மிகச்சிறந்தது. மேலும் பிரண்டை மருத்துவமும் மேற்கொண்டால் சீரான இரத்த ஓட்டம் கிடைக்கும்.


மூட்டு தொடரபான பிரச்சனைகளுக்கு  சித்தமருத்துவத்தில் அமுக்ரா மருந்து மிக பலனாக அமைகிறது. திரிபலா சூரணத்தை  தேனில் கலந்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலிக்கு தீர்வு கிடைக்கும். இந்த சித்த மருந்துகள் இம்காப்ஸ் மருந்து  விற்பனைக்  கடைகளில் கிடைக்கிறது. மருந்துகளால் மட்டுமின்றி தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளலாம். மேலும் நமது உணவு பழக்கம் மாறிப்போனது மிக முக்கிய காரணம் ஆகும். இதை தவிர்த்து சத்தான சிறுதானிய உணவுகளையும்  இயற்கையாக கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் என நமது உணவில்  சேர்த்துக் கொள்ளுதல் மூலம் நல்ல  ஆரோக்கியம் காணமுடியும். மூட்டு வலி பிரச்சனைகளுக்கு சித்த மருந்து மூலம் நல்ல குணம் காணலாம்.  கடுகு, சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்றாக அரைத்து அதனுடன் கற்பூரம் கலந்து வெது வெதுப்பான நீரில் கலந்து வலியுள்ள மூட்டுகளின் மேல் தடவி வர மூட்டுவலி மற்றும் அதனை சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.



தற்போது மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமன்றி எல்லா வயதினருக்கும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காச நோய், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காத காரணத்தால் 30 வயதுக்குள்ளேயே மூட்டு வலியால் பாதிக்கின்றனர். இதன் மூலம் மூட்டு வலி மட்டுமின்றி மனச்சோர்வு, அசதி போன்ற பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், இதை போக்க பக்கவிளைவுகள் இல்லாமல் சித்த மருத்துவம் மூலம் தீர்வு காணலாம். 


சரியான ஓய்வு, நேரத்திற்கு தூக்கம், சத்தான உணவுகள் என கடைபிடித்தால் மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதே போல் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் மூட்டு நோயால் பாதிக்காதவாறு நாகரீக  உணவுகளை தவிர்த்து சத்தான உணவு வகைகளை கொடுத்து வர குணம் காணலாம்.
உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூட்டு வலி கண்டிப்பாக இருக்கும்.  நேரம். தவறி சாப்பிடும் உணவு முறை பழக்கத்தாலும், அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் பருத்து பளுவை தாங்க முடியாததால், கால் மூட்டு வலி ஏற்படுவதும் ஒரு காரணமாகும்.


நமது வீட்டில் சாதம் வடிக்கும் கஞ்சியை மிதமான சூட்டில் கால் மூட்டுகளின் மேல் ஊற்றி வந்தால் மூட்டுவலி குறையும். இதை இன்றும்  கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள்  செய்து  வருவதை காணமுடிகிறது. ஆபத்தில்லா மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தை பயன்படுத்தி மூட்டு வலிக்கு தீர்வு காணலாம்.