மனித உடலில் ஓய்வில்லாமல் எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு எது என்று கேட்டால் அது இதயம் என்று சொல்லலாம்.கருவறையில் நாம் உருவாகும் நேரத்தில், எப்போது இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கின்றதோ, அன்றிலிருந்து அந்த மனிதன் இறக்கும் தருவாய் வரை,ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு உறுப்பு எதுவென்று கேட்டால் அது இதயம்.


ஆகவே அந்த இதயத்தை சரியானபடி பாதுகாப்பது, ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.சரி,இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது. அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, அதிகப்படியாக கோபம் அடையாமல் இருப்பது மற்றும் அதிகப்படியான படபடப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை  இதயத்தை எப்பொழுதும் ஒரே சீரான துடிப்புடன் வைத்திருக்கும்.இப்படியாக இதயத்தை  ஆரோக்கியமாக வைப்பது மட்டுமே நீங்கள் அதற்குத் தரும் ஆகச்சிறந்த பாதுகாப்பாகும்.


இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு பிரச்சனையால் பல உயிர்களை பலியாவதை கேட்டும், பார்த்தும் வருகிறோம். அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 5 நாட்களில் 98 பேர் இதயம் மற்றும் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 98 நபர்களில் 44 பேர் மருத்துவமனைகளிலும், 54 பேர் சிகிச்சை பெறுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உத்தர பிரதேசம் மாநி லம் கான்பூரில் உள்ள லஷ் மிபத் சிங்கானியா இதய நோய் அறுவை சிகிச்சை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:


கான்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 723 பேர் இதயநோய் தொடர்பாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இம்மாதம், 7ம் தேதி மட்டும் 14 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். அதில் ஆறு பேர் சிகிச்சையில் இருக்கும் போதே இறந்துள்ளனர்.மீதமுள்ள எட்டு பேர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.


நகரில் உள்ள மற் றொரு இதயநோய் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் மாரடைப்பில் பலியாகி உள்ளனர். தற்போது, அங்கு 604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக கடந்த 5 நாட்களில் 98 பேர்மாரடைப்பு காரணமாக இறந்துள்ளனர்.


இதையடுத்து குளிர் காலத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ளுமாறு இதய சிகிச்சை இயக்குனர் வினய் கிருஷ்ணா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ இந்தக் குளிர் காலநிலையில் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டும் வராது. டீன் ஏஜ் வயதினரை கூட மாரடைப்பு தாக்க நேரிடுகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் சூடாகவும் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும். வடமாநிலங்களில் தற்போது நிலவும் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக, மற்றும் மாரடைப்பு சுவாச கோளாறால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது” என தெரிவித்தார்.