தர்பூசணி சாப்பிட்டவர்கள் குடும்பத்துடன் மரணம்; வாட்டர் மெலன்தான் காரணமா? மருத்துவர் விளக்கம்
மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் கொண்ட குடும்பத்ததினர் பலியான நிலையில், அதற்கு வாட்டர் மெலன்தான் காரணமா?

இதுகுறித்து பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கொடுத்துள்ள விளக்கம்:
’’மும்பை நகரில் கடந்த 25 சில நாட்களுக்கு முன்னர், குடும்பத்துடன் வாட்டர் மெலன் சாப்பிட்ட நால்வர் அடுத்தடுத்து மரணமடைந்தது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதுபற்றிப் பல கோணங்களில் ஆய்வு நடந்து வந்த சூழ்நிலையில்
- வாட்டர் மெலானில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமா?
- வாட்டர் மெலானில் ஏதேனும் கலப்படம் இருந்து அதனால் மரணமா? என்றும் விசாரணை நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டம் சார்ந்த மருத்துவத் தடயவியல் துறையின் முதற்கட்ட அறிக்கையின்படி, பிரேதக் கூறாய்வின்போது உள்ளுறுப்புகளான மூளை/குடல்/ இதயம் ஆகியன "பச்சை" நிறம் பூண்டிருந்ததை எடுத்துக் கூறியது.
விஷம் வைத்த உணவா?
இதன் வழியாக வாட்டர் மெலானில் எந்த பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. மாறாக இது ஏதோ ஒரு உயிருக்கு ஊறு விளைவிக்கும் விஷப் பொருளை சாப்பிட்டதால் ஏற்பட்ட விளைவு என்ற முடிவு எட்டப்பட்டது. வாட்டர் மெலானில் கிருமித் தொற்றோ அல்லது கலப்படமோ காரணமில்லை என்று கருதப்பட்டு, இது விஷம் வைத்த உணவை உண்டதால் ஏற்பட்ட மரணங்கள் என்ற முடிவு எட்டப்பட்டது.
தற்போது மருத்துவத் தடயவியல் துறையினரின் அடுத்த கட்ட அறிக்கையில், மரணமடைந்தவர்களின் பிரேதங்களின் உள்ளுறுப்புகளில் குறிப்பாக இரைப்பையில் இருந்தும் அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த வாட்டர் மெலானின் மாதிரிகளிலும் "ஜிங்க் ஃபாஸ்பைடு" (ZINC PHOSPHIDE) எனும் விஷத்தன்மை கொண்ட ரசாயனப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் வழி வாட்டர் மெலான் மீது சுமத்தப்பட்ட களங்கம் முடிவுக்கு வந்துள்ளது. வாட்டர் மெலான் மீது எந்தப் பிரச்சனையும் இல்லை.
இனி, விஷத்தன்மை உள்ள பொருளை தற்கொலை எண்ணத்துடன் சாப்பிட்டார்களா? அல்லது இவர்களை கொல்லும் நோக்குடன் இவர்களது உணவில் கலக்கப்பட்டதைத் தெரியாமல் சாப்பிட்டார்களா? அல்லது எலிகளைப் கொல்லும் நோக்கில் எலி மருந்து வைத்திருந்த உண்வை அறியாமல் சாப்பிட்டார்களா? என்ற வாதங்கள் மட்டுமே இனி நமக்கானது.
எலிக் கொல்லி மருந்து
ஜிங்க் பாஸ்பைடு பொதுவெளியில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் "எலிக் கொல்லி மருந்தாக" விற்கப்படுகிறது. பசை வடிவிலும், கட்டி வடிவிலும், மாவு வடிவிலும் கிடைக்கிறது.
பெரும்பான்மை மரண நிகழ்வுகளில் இந்த எலி மருந்து என்பது சுய தீங்கு / தற்கொலை நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எலி மருந்தை உட்கொண்ட பின் உடலுக்குள் செல்லும் ஜிங்க் பாஸ்பைடு உடலின் நீர்ச்சத்துடனும் இரைப்பையில் இருக்கும் அமிலத்துடனும் ரசாயன வினை புரிந்து பாஸ்பைன் (PHOSPHINE) எனும் அபாயகரமான வாயுவை வெளியிடுகிறது.
இந்த வாயு, ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மூலை முடுக்கெங்கும் சென்று செல்களின் ஆற்றல் உற்பத்தி தளங்களான மைட்டோ கான்ட்ரியாக்களை மூச்சு விட இயலாமல் செய்து கொல்கின்றது.
இதன்வழி, முக்கிய உறுப்புகளான சிறுநீரகங்கள், இதயம், மூளை, நுரையீரல் என அனைத்துமே முடங்கும் நிலை உருவாகிறது. ரத்த ஓட்ட முடக்கம், அதி தாழ் ரத்த அழுத்த நிலை, இதய தசை அழற்சி, நுரையீரலில் நீர் தேங்குதல், இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு என்று குறிவைக்கும் இடமெல்லாம் தீங்கு செய்வது மட்டுமே அறிந்த விஷம் இது.
100% வரை மரணம்
இந்த விஷத்தை உட்கொண்டோரில் 37- 100% வரை மரணத்தை அளிக்கக் கூடிய கொடிய விஷமாக இது இருக்கிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளான ஆர்கனோ பாஸ்பேட்டுகளுக்கு என பிரத்யேக முறிவு மருந்துகள் ( அட்ரோபின் + ஆக்சைம்கள்) உள்ளன.
ஆனால், ஜிங்க் பாஸ்பைடு, மஞ்சள் பாஸ்பரஸ் உள்ளிட்ட இந்த எலிக் கொல்லி மருந்துகளுக்கு பிரத்யேக முறிவு மருந்துகள் கிடையாது. சுவாசத்தை தக்க வைக்க செயற்கை சுவாசக் கருவி, ரத்த அழுத்தத்தை தக்க வைக்க உயிர்காக்கும் மருந்துகள், சிறுநீரகங்களை காக்க டயாலசிஸ் என்று அதி தீவிர சிகிச்சைகளை கூட்டாக வழங்கிட வேண்டியிருக்கும்.
காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாழிகையும் மரணத்திற்கு அருகில் கொண்டுய்க்கும் கொடு விஷமிது. அதனால்தான் தமிழ்நாட்டில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்து அரசு ஆணை பிறப்பித்தது.
இந்த எலி மருந்தை குறிப்பாக ஜிங்க் பாஸ்பைடு கொண்டு எலி கொல்லி மருந்தை கொல்வதற்காக மறைமுகமாக பயன்படுத்த முடியுமா? முடியாது என்பதே பதில், காரணம் இந்த எலி மருந்தில் உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அதீத கார சுவை கொண்ட பொருளான டெனடோனியம் பென்சோவேட் (Denatonium Benzoate) கலக்கப்பட்டுள்ளது.யாரேனும் தெரியாமல் வாயில் வைத்தால் கூட அதற்கு மேல் சாப்பிடாமல் துப்பி விட வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.
அறியாமல் சாப்பிட்டிருக்க முடியாது
வாட்டர் மெலானில் இருக்கும் இனிப்பை விட இந்த ரசாயனத்தின் கார சுவை மிக மிக மிக அதிகம். எனவே, அறியாமல் இதை சாப்பிட்டிருக்க முடியாது.
இதற்கடுத்த படியாக, இந்த ஜிங்க் பாஸ்பைடை வாட்டர் மெலானில் கலந்திருப்பதால், ஜிங்க் பாஸ்பைடு + வாட்டர் மெலானில் உள்ள நீர் / ஈரப்பதம் சேர்ந்து வேதியியல் வினை புரிந்து பாஸ்பைன் வாயுவை வெளிவிடும். பாஸ்பைன் வாயு குமட்டும் அளவு நாற்றமடிக்கும் வாயுவாகும.
கெட்டுப்போன மீன்/ பூண்டு நாற்றம் அடிக்கும் வாயு. எனவே, வாட்டர் மெலான் பழத்தை வெட்டும் போதே நாற்றம் அடிக்கும். பிறகு எப்படி அதை மறைமுகமாக வழங்க முடியும்.
மூன்றாவது, வணிக ரீதியாக விற்கப்படும் எலி மருந்துகளில் உணவில் கடந்தாலும் உடனடியாக அடையாளம் தெரிய வேண்டும் என்பதால் நீலம்/ பச்சை/ இளஞ்சிவப்பு நிற சாயம் சேர்க்கப்படுகிறது. வாட்டர் மெலானில் கலந்தாலும் முழுவதும் அந்த சாய நிறத்தைக் கொண்டு வரும் வாய்ப்பு அதிகம்.
எனவே,
ஒரு உணவில் கலக்கப்பட்ட விஷம்
- சுவையிலும் அதிக காரமாகவும்
- நாற்றமெடுக்கக்கூடியதாகவும்
- நிறத்திலும் சாயத்தின் நிறம் சேர்க்க கூடியதாகவும் இருப்பதால் பொதுவாக ஜிங்க் பாஸ்பைடு விஷம் பிறரை மறைமுகமாகக் கொல்வதற்கு பயன்படுத்த உகந்ததல்ல என்பதால் வாட்டர் மெலனில் எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Before You Go
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
ட்ரெண்டிங் செய்திகள்






















