உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும் சவால்களையும் கொடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு பல்வேறு நாடுகளும் வழிதெரியாமல் திண்டாடி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜுன் 7 தேதிக்கு பின் சில தளர்வுகளை அதிகப்படுத்தியும், அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் மாவட்டங்களின் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமும் இடம்பிடித்துள்ளது.

குறிப்பாக ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 447 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 29 ஆயிரத்து 875 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 504 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 685 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 424-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 4 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து தடுப்பூசிபோடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், தடுப்பூசி பெற்றவுடன் மீண்டும்  நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரும் என மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.