பலரும் கணித்து கூறியது போலவே, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,097 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய நாளை விட, இது 20,718 அதிகமாகும். 


இந்நிலையில், பிரபல தொற்றுநோயியல் மருத்துவர் பிரியா சம்பத்குமார் கொரோனா  நோய்த்தொற்றின் பல்வேறு கட்டங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த தேசம் மூன்றாவது பெருந்தொற்று அலைக்கு தயாராகிவரும் நிலையில், இவரின் அறிவுரைகள் பல்வேறு வகைகளில்  உதவும். 


பிரியா சம்பத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "மூன்றாவது அலையின் அறிகுறியாக, தற்போது கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. மோசமான விளைவுகளை குறைப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டியதிருந்தாலும், இதுவரை பெருமளவு உயிரிழப்பை ஏற்படுத்தி வந்த டெல்டா ரக வைரஸை விட  ஒமிக்ரான் கொரோனா வைரஸின் தீவிரத்தன்மை குறைவானதாக இருக்கும் என்ற தகவல் நம்பிக்கையளிப்பதாக உள்ளன.     


காரணம்?   


முதலாவதாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்தொகையின் விகிதம் அதிகரித்துள்ளது (அல்லது) குறிப்பிட்ட சதவிகிதம் பேர் முன்னர் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர்; இரண்டாவதாக, ஒமிக்ரான் ரக வைரஸ் தாக்குதலின்போது, தீவிர நுரையீரல் (நிமோனியா) மற்றும் ரத்த பிராணவாயு செறிவூட்டல் தேவைகள் குறைந்து காணப்படுகின்றன.










நாம் எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?  


தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தகுதியான நபர் என்றால் பூஸ்டர் தடுப்பூசியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 


சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து கொரோனா  பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். 


பாதிப்பு இருப்பது தெரியவந்தால்..


தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்; உள்ளூர்மட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி, குறைந்தது ஐந்து நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல் நிலையில்  இருக்க வேண்டும். 


மிகக்குறைந்த வயது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகள் பெரும்பாலானோர் எந்தவித மருத்துவமனை சிகிச்சையின்றி  குணமடைகின்றனர். 


நாள்பட்ட நோய்கள் உடையவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்ட  மூத்த குடிமக்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் போன்ற அதிக ஆபத்தும் அபாயமும் உள்ள பிரிவினருக்கும் மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறுகின்றனர். 


தீவிர பாதிப்பை எப்படி எதிர் கொள்ளலாம்?  


தற்போது, இந்தியாவில் கிடைக்கும் மோனோகுளோனல் நோய் எதிர்ப்புக் கிருமி (monoclonal antibodies) ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை.   


கொரோனா அறிகுறிகள் தென்பட்ட ஐந்து நாட்களுக்குள் மோல்னுபிரவீர், ரெம்டெசிவிர், பக்ஸ்லோவிட்' (Paxlovid) போன்ற தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால், தீவிர மருத்துவ பிரச்சனையைத் தவிர்க்கலாம்.   


மோல்னுபிரவீர்: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத இதர ஆபத்து நிறைந்த  நபர்களுக்கு இந்த மருந்து அதிகம் பயனளிக்கும். இதர பிரிவு நோயாளிகளுக்கு இதனால் பலனில்லை. அதிகம் பயன்படுத்தக்கூடாது. வைரஸை உருமாற்றம் அடையச் செய்யும். கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள அனுமதியில்லை.  


Molnupiravir pill: கொரோனா சிகிச்சையில் மோல்னுபிரவீர்.. என்ன மருந்து இது? எவ்வாறு பயனளிக்கும்? 


ரெம்டெசிவிர் மருந்து: 


ரத்த நாளங்களில் நேரடியாக தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும் (IV Medication) 


மிகவும் ஆபத்து நிறைந்த நபர்களுக்கு மட்டும் இந்த மருந்து அறிவுறுத்தப்படுகிறது.


பக்ஸ்லோவிட்' (Paxlovid): இந்தியாவில் கிடைப்பது இல்லை 


கூடுதல் தகவல்கள்: 


நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை  வெளிநோயாளிகளுக்கு போடக் கூடாது; ஆக்ஸிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நோயாளிகளுக்கு கட்டாயம் போடக் கூடாது. 


இவர்மெக்டின் (Ivermectin),குளோரோகுயின் (chloroquine),  ஃபேவிபிராவிர் (Favipiravir) போன்ற மருந்துகள் தேவையற்றது.