8th pay commission: அரசு ஊழியர்களின் ஊதியம் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 69 மடங்கு உயர்ந்துள்ளது.

மத்திய அரசு அதிரடி

8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஆணையத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். ஏழாவது ஊதியக் குழு 2014 இல் அமைக்கப்பட்டது மற்றும் அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வந்தன. இது 2026 உடன் காலாவதியாகிறது. அதன்படி, 2026 முதல் பின்பற்ற தேவையான புதிய ஊதிய நடைமுறையை 8வது ஊதியக்குழு பரிந்துரைக்கும். இதன்மூலம் 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தப்பட உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ரூ.51,480 ஆக உயரலாம்.

69 மடங்கு அதிகரித்த ஊதியம்:

மத்திய அரசின் தரவுகளின்படி, எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி நான்காவது ஊதியக் குழுவிலிருந்து மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் வரை மத்திய ஊழியர்களின் சம்பளம் சுமார் 69 மடங்கு அதிகரித்துள்ளது. நான்காவது ஊதியக் குழு 40 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1986ல் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, மத்திய அரசு அமைக்க உள்ள 8வது ஊதியக் குழுவால்,  அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.51480 ஆக உயரலாம். அதாவது 40 ஆண்டுகளில் குறைந்தபட்ச சம்பளம் 69 மடங்கு அதிகரித்துள்ளது.  கடந்த ஊதிய குழுவின் அறிக்கையின்படி, ரூ.7,000 ஆக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊதியக்குழு என்றால் என்ன?

ஊதியக் குழு என்பது மத்திய அரசால் அமைக்கப்படும் ஒரு குழு. இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பை மதிப்பாய்வு செய்து அதில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. இதனுடன், மத்திய அரசு ஊழியர்களின் போனஸ், அடிப்படை சம்பளம், அலவன்ஸ் மற்றும் இதர சலுகைகளை இந்த குழு ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளை வழங்குகிறது. அதன் பரிந்துரைகள் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். வழக்கமாக, சம்பள கமிஷன் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும். 

முதல் ஊதியக் குழு எப்போது அமைக்கப்பட்டது?

நாட்டில் இதுவரை ஏழு ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் சம்பள கமிஷன் மே 1946 மற்றும் மே 1947 க்கு இடையில் அமைக்கப்பட்டது. இந்த ஊதியக்குழுவின் தலைவராக ஸ்ரீனிவாஸ் வரதாச்சார்யா இருந்தார். இந்த ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.55 மற்றும் அதிகபட்சமாக ரூ.2000 சம்பளம் என பரிந்துரை செய்து, அதன் பலன் 15 லட்சம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.  

எந்த ஊதியக் குழுவில் எவ்வளவு சம்பளம் உயர்த்தப்பட்டது? 

  • முதல் ஊதியக் குழு: ரூ.55
  • இரண்டாவது ஊதியக் குழு: ரூ.80
  • மூன்றாவது ஊதியக் குழு: ரூ.196
  • நான்காவது ஊதியக் குழு: ரூ.750
  • ஐந்தாவது ஊதியக் குழு: ரூ.2750
  • ஆறாவது ஊதியக் குழு: ரூ.7000
  • ஏழாவது ஊதியக் குழு: ரூ.18000