மாநாடு படத்தில் தனது இசையை பாராட்டிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். 


இறைவனின் கருணைக்கு நன்றி. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமான படம். வெங்கட் பிரபு, சிம்பு ஆகியோருடன் நான் இணைந்த முந்தைய படங்களில் பல வெற்றிப்பாடல்கள் அமைந்தன. எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. இருந்தாலும் ரசிகர்களும் இசை ஆர்வலர்களும் பிண்ணனி இசையில் நான் மேற்கொண்ட புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, பாராட்டியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி.




எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக  நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக அவர் மாறியுள்ளார். 


மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை  பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.