Yezhu kadal Yezhu malai: ‘ரீலிசுக்கு முன்பே அங்கீகாரம்’ - சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள இயக்குநர் ராம் படம்..!
இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் ஏழு கடல் ஏழு மழை திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது.

இயக்குநர் ராம்
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உலகமயமாக்கல் அதன் விளைவாக தனுமனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தனிமனித அகத் தேடல்களை இவரது கதைகள் மையமாக கொண்டிருப்பவை. தற்போது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை.
ஏழு கடல் ஏழு மலை
மலையாள நடிகர் நிவின் பாலி, அஞ்சலி , சூரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படம் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியிருக்கிறது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் வாழ்த்து
படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் "ஏழு கடல் ஏழு மலை". எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது.
வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறை நண்பர்களும் சினிமா ரசிகர்களும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆண்டின் இறுதியில் இச்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி” என தெரிவித்துள்ளார்.