திருச்சியில் இபி ரோடு, அண்ணா நகர் பகுதியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு  உணவு வழங்கி ஒரு வேளை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் : இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது -  இதே போல் கேரளா மற்றும் புதுவையிலும் இன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகள் குறித்த மற்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.


உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவேளை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே கடந்த மே 25 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம்சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.


அதில், மே-28 ஆம் தேதி (இன்று) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ளது.  அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மதிய உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.  


அதன்படி விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்படி சென்னையில் நீலாங்கரை பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மக்கள்  வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனையடுத்து மக்கள் பசிப்போக்கும் விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற ஹேஷ்டேக் பகிர்ந்து டிரெண்ட் செய்தவருகிறார்கள். இதுமட்டும் அல்லாமல் திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 


சமீபகாலமாக நடிகர் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் அரசியலில் களமிறங்க உள்ளதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு அரசியலில் ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அதற்கான தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.