கோலிவுட் சினிமாவில் தவிர்க முடியாத இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மிஸ்கின் . அவ்வபோது நடிப்பு திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , சைக்கோ, பிசாசு போன்ற படங்கள் பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் மிஸ்கின் சமீபத்தில் சிம்புவை இயக்குவதற்கான தனது விருப்பம் குறித்து பேசியுள்ளார். அதில் “ சிம்பு ஒரு அபரிமிதமான திறமை கொண்ட ஒரு குழந்தை.ஆனா அப்பப்போ அவருக்கு பேய் பிடிச்சுக்கும். சிம்புவை எனக்கு சிறு வயதில் இருந்தே பிடிக்கும். அவர் சிறு வயது முதலே அதீத திறமையானவர் . அவரது தந்தை  பன்முக திறன்மையை ஒருங்கே பெற்ற கலைஞர்.சிம்புவிடம் நான் கதை சொன்னேன்..அதற்கு அவர் என்ன கதை என கேட்டார்..நான் கிளைமேக்ஸின் 100 பேரை நீ கொல்வதாக இருக்கும் என்றேன்..உடனே சரி என கூறிவிட்டார். எனது உதவியாளர்களிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன் . இப்படி சொன்னா உனக்கு பிடிச்சுடும்னு. அந்த படம் சிம்புவுக்காக காத்திருக்கு..சீக்கிரம் இணைந்து வேலை செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.







மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிம்பு , தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முத்து என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. மற்றும் முத்துவின் வாழ்க்கை என்ற பெயரில் படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பலரின் ஸ்டேட்டஸ்களை நிறைத்தது. 



அடுத்ததாக கோகுல் இயக்கத்தில் சிம்பு  ’கொரோனா குமார்’ என்ற  படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட  படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.