Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: தொடர் விடுமுறையின் வாயிலாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் வசூல் அடுத்த மூன்று நாட்களில் அதிகரிக்குமா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Parasakthi Box Office: சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு போட்டியாக வந்த இரண்டு படங்களில் ஜீவாவின் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிர்த்தெழும் பராசக்தி..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், சுமாரான திரைக்கதையால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால், தொடர் விடுமுறை காரணமாக வசூல் ரீதியாக படம் வெற்றி பெறும் என நம்பப்பட்டது. ஆனால், முதலுக்கே மோசம் என்பது போல, முதல் இரண்டு நாட்களை கடப்பதற்குள்ளாகவே படத்தின் வசூல் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கக் கூடும் என நிலவிய கணிப்புகள் யாவும் பொய்த்துப்போகின. இந்நிலையில், பொங்கல் விழா நேற்று முடிவடைந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களும் விடுமுறையாக இருப்பதால், பொதுமக்கள் குடும்பத்துடன் திரையரங்குகளை நோக்கி பயணிப்பர் என நம்பப்படுகிறது. இதனால், பரசாக்தி படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்குமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
கம்பேக் மோடில் பராசக்தி..
கடந்த திங்கர்கிழமை முதலே பராசக்தி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, ஆன்லைன் தளங்களில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்வதே சிரமமானதாக மாறியது.இந்நிலையில், அடுத்த மூன்று நாள் விடுமுறையை முன்னிட்டு, நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு நிலை, நேற்றைய நாள் முழுவதும் சீராக இருந்தது. அதன் விளைவாக இன்று காலை 7 மணி நிலவரப்படி, கடைசி 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் டிக்கெட்டுகள் பராசக்தி படத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்மைஷோ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராசக்திக்கு டஃப் கொடுக்கும் ஜீவா?
பொங்கலுக்கு ஜனநாயகன் மற்றும் பராசக்தி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், பல சிறிய திரைப்படங்கள் வெளியீட்டு முடிவை திரும்ப பெற்றன. ஆனால், சென்சார் பிரச்னையால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் படத்தின் வெளியீடு ரத்தானது. ஆனாலும், பெரும் எதிர்பார்ப்பு மற்றும் அரசியல் பின்புலங்களுக்கு மத்தியில் பராசக்தி வெளியானதால், மற்ற படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்கினர். ஆனால், படத்திற்கு கிடைத்த மோசமான வரவேற்பு மற்றும் மந்தமான வசூலை உணர்ந்து, உடனடியாக கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் வா வாத்தியார் சறுக்கினாலும், ஜீவாவின் படம் குடும்பமாக பொங்கலுக்கு பொழுதை கழிக்க விரும்புவோருக்கு ஏற்ற படமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த படத்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பராசக்தி படத்தின் வசூல் அடுத்த மூன்று நாட்களில் வலுவாக பதிவாகுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது.

பராசக்தி வசூல் நிலவரம்..
இந்தியாவில் முதல் 5 நாட்களில் பராசக்தி படம் சுமார் 30 கோடியே 75 லட்சம் வசூலித்ததாக சாக்னிக் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே சுமார் 30 கோடி வசூலாகியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையான நேற்று, படத்தின் வசூல் கடைசி 3 நாட்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து சுமார் 5 கோடியே 10 லட்சம் ரூபாயாக பதிவாகியுள்ளது. இது ஆரம்பகட்ட தகவல்கள் மட்டுமே என சாக்னிக் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.























