ராஜமெளலி

இந்திய சினிமாவை ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. பாகுபலி 1 , 2 படங்களின் மூலம் அனைத்து திரைத்துறையினருக்கு வரலாற்று திரைப்படங்களை உருவாக்க பெரிய இன்ஸ்பிரேஷனாக ராஜமெளலி இருக்கிறார். இந்திய புராணக் கதைகளுக்கு உலகளவில் பெரிய மார்கெட் இருக்கிறது என்பதை இந்த படங்களின் வெற்றிகள் நிரூபித்து காட்டின. பாகுபலி ஒரு உச்சம் தொட்டால் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் மற்றொரு வரலாற்று சாதனை படைத்தது. இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் உலகளவில் வைரலாகி ஆஸ்கர் மேடை வரை ஒலித்தது.  வசூல் ரீதியாக ராஜமெளலி  படங்கள் தொட முடியாத உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளன. தற்போது மகேஷ் பாபுவை வைத்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ராஜமெளலி.

பாகுபலி படத்தில் நடிக்க ஶ்ரீதேவி போட்ட கண்டிஷன்

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா கதாபாத்திரம் பரவலான கவனம் பெற்றது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க நினைத்தார் ராஜமெளலி. பாகுபலி படத்தில் நடிக்க ஶ்ரீதேவி அதிகப்படியான சம்பளம் கேட்டதோடு தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காட்சிகளை மாற்றி எழுதவும் கேட்டுள்ளார். இதனால் கடுப்பான ராஜமெளி ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தார். எதிர்பார்த்ததை விட ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் மிரட்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மகேஷ் பாபு ராஜமெளலி கூட்டணி

மகேஷ் பாபு ராஜமெளி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் பூஜை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சாகசப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி என கூறப்படுகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதற்கான அவர்  35 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.