கோலிவுட்டின் மிக பிரபல ஜோடியான ஐஷ்வர்யா, தனுஷ் இருவரும் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களின் முடிவை அறிவித்துள்ளனர்.


தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000-களில் அவருக்கு பக்கபலமாக அவரது இருந்தவர் ஐஸ்வர்யா. இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமிக்கிறார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2013-இல் JFW-க்கு ஐஷ்வர்யா அளித்த பேட்டியில், ஐஸ்வர்யா தங்கள் உறவைப் பற்றி மனம் திறந்தார். தனுஷும் தானும் ஒன்று சேர்வது ‘கடவுளின் விருப்பம்’ என்றார்.



“நானும் தனுஷும் ஒன்று சேர்வது கடவுளின் விருப்பம். இது நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது,” என்று ஐஸ்வர்யா JFW உடனான பேட்டியில் கூறியிருந்தார். ஆல்பர்ட் திரையரங்கில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் பார்க்க சென்றிருந்தபோது தான் அவரை முதன்முதலில் சந்தித்ததாக திரைப்பட தயாரிப்பாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


படம் பார்த்த பிறகு அவரது நடிப்பைப் பாராட்டி அவருக்கு பூங்கொத்து அனுப்பியிருந்தாராம், தனுஷ் நன்றி தெரிவிக்க மீண்டும் தொடர்பு கொண்டாராம். பின்னர் அவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு ஆறு மாதங்களில், அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஐஷ்வர்யா தங்கள் திருமணம் பற்றிய சிறந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “திருமணத்திற்குப் பிறகு நானும் தனுஷும் ஒருவரையொருவர் கண்டுபிடித்ததாக உணர்ந்தோம், எங்கள் தேவையும், ஆர்வமும், ஆசையும் எங்குள்ளது என்பதைக் கற்றுக்கொண்டோம். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் எங்கள் குணாதிசயங்களை ஒருவருக்கொருவர் அறிந்துகொண்டோம்." என்ற அவர்.


தங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் அவர்களுக்கான விடுதலையை, வெளியை கொடுத்துக்கொள்வதுதான் என்றார். அவர் மேலும் பேசுகையில், "நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற நபருக்காக மாறவேண்டும் என்பதை நாங்கள் இருவரும் நம்பவில்லை. நாம் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, எதை நம்புகிறோமோ அதன் அடிப்படையில் நம் மனம் அமைக்கப்பட்டிருக்கும், அதன் பிறகு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் கடினம்", என்றார்.






தற்போது நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஷ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம். இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை நாங்களே சிறப்பாக புரிந்துகொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.