சன் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் விஜே அர்ச்சனா. ஜீ தமிழ், விஜய் டிவி என தொடர்ந்து ஒரு சிறப்பான ஒரு தனித்துவமான தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 2004ம் ஆண்டு வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜாரா என்ற ஒரு மகள் இருக்கிறார். திருமணம் முடிந்து 19 ஆண்டுகள் நிறைவடையுள்ளது, ஆனால் அதில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கணவரோடு சேர்ந்து வாழவில்லை. இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்புடனும் பாசத்துடனும் காதலுடனும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக சில காரணங்களால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மனம் உடைந்து பேசியிருந்தார் விஜே அர்ச்சனா.

  



23 இயர்ஸ் ஆஃப் அர்ச்சனா:


மகளிர் கல்லூரி ஒன்றில் '23 இயர்ஸ் ஆஃப் அர்ச்சனா' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அர்ச்சனா ஒரு திடுக்கிடும் தகவலை கூறியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அர்ச்சனாவை பற்றி காணொளி மூலம் அவரது கணவர் வினீத் பேசுகையில் "அர்ச்சனா எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். திருமணமாகி 19 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்ததில்லை. அவள் தனியாகவே அனைத்தையும் சமாளித்தாள். எங்களின் மகள், எனது பெற்றோர், அர்ச்சனாவின் அம்மா, அர்ச்சனாவின் தங்கை, எங்கள் செல்ல நாய்க்குட்டி சிம்பா என அனைவரையும் அவள் ஒரு தனி ஆளாக இருந்து மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாள்.


ஒரு கணவராக நான் சொல்வதை காட்டிலும் ஒரு சக மனிதனாக அவள் செய்ததை வேறு எந்த ஒரு பெண்ணாலும் அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது. அவள் எங்கள் அனைவரும் மிக மிக ஸ்பெஷல். ஆனால் நான் பல சமயங்களில் அவளுடன் நல்ல மாதிரியாக இருக்க முடிந்ததில்லை. இவை அனைத்தையும் தாண்டி அவள் சிரித்த முகமாக அவளுடைய வேலையையும் முழுமையாக செய்துள்ளார். எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் அவள் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறோம்" என மிகவும் பெருமையாக பேசியிருந்தார் அர்ச்சனாவின் கணவர். 


கண்கலங்கிய அர்ச்சனா :


இதை கேட்டு கண்கலங்கிய அர்ச்சனா இந்த சமயத்தில் நான் உங்களுடன் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மாதத்திற்கு முன்னர் நானும் வினீத்தும் இதுவரையில் வாழ்ந்தது போதும். உன்னுடைய வாழ்க்கை வேறு என்னுடைய வாழ்க்கை வேறு. அதனால் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் அந்த சமயத்தில் தான் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததால் என்னை சுற்றிலும் ஏராளமான வெறுப்புகள். இப்படி உலகத்திற்கு கத்தி கத்தி பதில் சொல்ல பார்க்கும்போது நான் என கணவரை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் ஜாரா எங்களை உட்காரவைத்து நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியுமா என யோசித்து பாருங்கள் என்றாள்.


அதற்கு பிறகு தான் நானும் எனது கணவரும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி சந்தித்து காதலித்து வாழ்ந்தோமோ ஆதை போலவே வாழ்ந்தோம். மீண்டும் நான் அவர் மீது காதலில் விழுந்துவிட்டேன். வினீத் இல்லாமல் என்னால் வாழமுடியாது. அவர்தான் என்னுடைய மூச்சு, வாழ்க்கை, உயிர் எல்லாமே. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் நான் அவருடன் சண்டை போடுவேன். மாசத்துக்கு ஒருமுறை விவாகரத்து கேட்பேன். பிறகு உடனே வந்து கட்டிக்கொள்வேன். அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது" என தனது காதலை உரக்க சொன்னார் விஜே அர்ச்சனா.