தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால்.விஷால் இன்று (ஆகஸ்ட் 29) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 31-வது படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷால் 31 என அழைக்கப்பட்ட இந்த படத்திற்கு “வீரமே வாகை சூடும்”(Veerame Vaagai Soodum) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விஷாலின் பிறந்த நாளுடன் சேர்த்து, வீரமே வாகை சூடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 














விஷால் தற்போது தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் இணைந்து  ’எனிமி’(Enemy) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், விஷாலில் 31 வது படமான வீரமே வாகை சூடும் படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்புகளை ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர் படக்குழு. கிட்டத்தட்ட 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாம் .  படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைப்பெற்றது. இதற்காக விஷால் சிறிது காலம் ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்தார்.


வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்குகிறார்.விஷாலின் VFF (vishal film factory ) தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.  வீரமே வாகை சூடும் படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், டிம்பிள் ஹயாத்தி, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டு , அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


விஷால் 32: Vishal 32 Director 


விஷாலின் முந்தைய படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால், எனிமி மற்றும் வீரமே வாகை சூடும் படத்தை முழு நம்பிக்கையுடன்  நடித்து கொடுத்துள்ளாராம் விஷால்.இது ஒரு புறம் இருக்க விஷாலில் பிறந்த நாளில் அவரின் அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விஷால் இன்று முதல் தனது 32 வது படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். விஷால் 32 (Vishal 32) படத்தையும் வினோத் என்னும் அறிமுக இயக்குநரே இயக்க உள்ளார். இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் என்பது கூடுதல் தகவல். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.