நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், படக்குழுவினர் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை மிக வேகமாக முடுக்கி விட்டுள்ளனர். 


இந்நிலையில், ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து வருவதோடு, பல்வேறு நேர்காணல்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகனான விஜய் சேதுபதியிடம் `படத்தில் வருவதைப் போல, உங்கள் நிஜ வாழ்க்கையில் இருவரைக் காதலித்து இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் முக்கோணக் காதல் ஏற்பட்டிருக்கிறதா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டவுடன், அதற்குக் காட்டமான பதிலை அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 



`இது என்னோட வாழ்க்கை.. இது என் பெர்சனல். நான் காதலிச்சிருக்கேன்.. காதலிக்கலை என்பதை எப்படி உங்ககிட்ட சொல்றது? படத்தைப் பற்றி மட்டும் கேள்வி கேளுங்க.. எந்த பெர்சனல் விவகாரத்திலும் மூக்கை நுழைக்காதீங்க.. ஏன்னா அதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்’ எனக் கோபமாகக் கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த பதில் பலரையும் கவர்ந்துள்ளதோடு, வைரலாகியும் வருகிறது. 






விஜய் சேதுபதி - விக்னேஷ் சிவன் கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `நானும் ரவுடி தான்’ திரைப்படம் பெரியளவில் ஹிட்டானதை அடுத்து, மீண்டும் இதே கூட்டணி ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்காக இணைந்துள்ளது. முந்தைய படத்தின் பெருவாரியான வெற்றியின் காரணமாக, நடிகர் விஜய் சேதுபதி ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் கதையையே கேட்காமல், இயக்குநர் விக்னேஷ் சிவன் மீதான நம்பிக்கையில் முழு திரைப்படத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.