பல வருடங்களாக காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரது தரப்பில் இருந்து திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. தங்களது திருமணத்தை தனிப்பட்ட ஒரு நிகழ்வாக வைத்துக்கொள்ளவே இருவரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் விஜய் மற்றும் ராஷ்மிகா திருமணத்தை ஆவணப்படமாக வெளியிடுவதற்கு பெரும் தொகை கொடுத்து வாங்க முன்வந்துள்ளது.
60 கோடியை மறுத்த விஜய் தேவரகொண்டா
சினிமா தவிர்த்து சினிமா நட்சத்திரங்களில் திருமண நிகழ்வுகளும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்த கலாச்சாரம் முதலில் பாலிவுட்டில் இருந்து தொடங்கியது. தீபிகா படுகோன் , கியாரா அத்வானி போன்ற நட்சத்திரங்களின் திருமணங்கள் ஒரு திரைப்படத்திற்கு நிகரான அனுபவமாக வெளியாகின. பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தென் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் அவரது திருமண நிகழ்வு இடம்பெற்றது. இந்த திருமண நிகழ்வை நெட்ஃப்ளிக்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியது.
அந்த வகையில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் திருமண ஆவணப்படத்தை 60 கோடிக்கு நெட்ஃளிக்ஸ் தளம் விலை பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தங்களது திருமண நிகழ்வை மனதிற்கு நெருக்கமாக வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறி இந்த ஆஃபரை விஜய் தேவரகொண்டா மறுத்துள்ளார். தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களையும் தனியாக ஆள் போட்டு வீடியோக்களாக பதிவிட்டு வரும் பிரபலங்கள் மத்தியில் விஜய் தேவரகொண்டாவின் இந்த முடிவு ரசிகரகளிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பிப்ரவரி 26 திருமணம்
வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் இருவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இரு நடிகர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
