தெலுங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான  ‘நுவ்விலா ’ படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்தேவரகொண்டா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த விஜய் தேவர கொண்டா, அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்தார். இந்தப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது,  தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்தது.


தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸி வாலா, டியர் காம்ரேடு, வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த விஜய்தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லிகர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில்  ‘பாக்ஸர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை அனன்யா பாண்டே, பிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், விஷூ ரெட்டி உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் போஸ்டர்கள் முன்னதாக சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்ததாகவும் பூரி ஜெகநாத்துடன் விஜய் தேவரகொண்டா இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 






பூரி ஜெகநாத் தான் முன்பே எழுதி வைத்த  ‘ஜனகனமண’  கதையை விஜய் தேவரகொண்டாவிடம் சொல்ல அந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்த நிலையில் இந்தப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறதாம். இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மதியம் 2.20 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.


தேசபற்றை மையமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் கதையை பூரி ஜெகன்நாத் முன்னதாக பிரபல நடிகர் மகேஷ் பாபுவிடம் சொன்னார். ஆனால் அது படமாக வில்லை. இந்த நிலையில்தான் தற்போது விஜய் தேவகொண்டாவிடம் ஓகே வாங்கியிருக்கிறார் பூரி. இந்தப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.