நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையே ஒரு ”க்ரிஞ்ச் தான்” என பேசியிருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


”க்ரிஞ்ச் தான் வாழ்க்கை”


பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி யாருமே சொல்லாத cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் வெற்றி பெற்றது என கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது ”Cringe என்று சொல்லி நாம் பல விஷயங்களை மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காக தான் நாம் அனைவரும் ஏங்குகிறோம். அதனை பலரும் Cringe என கூறிவிடுகிறார்கள். யாருமே சொல்லாத Cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது” என குறிப்பிட்டார்.


பிச்சைக்காரன் -2:


விஜய் ஆண்டனி நடித்த ”பிச்சைக்காரன்” படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்து, இயக்கியதோடு தயாரித்து உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒய். ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே,  'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதாவது, பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து அதிகப்படியான எதிர்பார்ப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை காட்டிலும், பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஆந்திராவில் முதல் நாளில் அதிகளவில் வசூலித்துள்ளது. 


வசூல் நிலவரம்:


மூளை மாற்று சிகிச்சை மற்றும் வர்க்க பேத நிலைகள், அண்ணன் - தங்கை பாசம் என பல்வேறு விஷயங்களைப் பேசும் இப்படம்,  தெலுங்கில், ‘பிச்சகாடு 2’ எனும் பெயரில் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை ‘பிச்சைக்காரன் 2’ உலக அளவில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் தெலுங்கில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 


பிச்சைக்காரன் - 3:


பிச்சைக்காரன் 2 வெளியாகி ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் பிச்சைக்காரன் 3வது பாகம் எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அந்த பாகம் முற்றிலும் வேறுப்பட்ட கதையம்சத்தை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் 3 வது பாகம் வரும் 2025ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் விஜய் ஆண்டனி உறுதியாக கூறியுள்ளார்.