'பிச்சைக்காரன் 2’ பட ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி உடல்நலன் தேறி வரும் நிலையில், தன் உடல்நிலை குறித்து மீண்டும் ட்வீட் செய்துள்ளார். இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னணி பாடகர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையாளராக கோலிவுட்டில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.


பெரும் விபத்து:


மலேசியாவில் லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி  விஜய் ஆண்டனிக்கு விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியானது. இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஆன நிலையில், பிச்சைக்காரன் 2 படத்துக்கான பணிகள் முன்னதாகத் தொடங்கி நடைபெற்று வந்தன.


விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகும் நிலையில் காவ்யா தாப்பர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகினர். அதனைத்தொடர்ந்து,  பிச்சைக்காரன் 2 படத்தில் படப்பிடிப்பு மலேசியாவின் லங்காவி தீவில் முன்னதாக நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங்கின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியதாகவும், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


அறுவை சிகிச்சைகள்


படகில் இருந்தபடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியபோது நிகழ்ந்த விபத்தில் அவர் சுயநினைவிழந்து தண்ணீரில் மூழ்கியதாகவும், பற்கள், தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.


இதனையடுத்து தன் உடல்நிலை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  விஜய் ஆண்டனி தம்ப்ஸ் அப் காண்பித்தபடி ட்வீட் செய்திருந்தார். ”மேலும் ஒரு பெரிய அறுவை சிகிச்சை இப்போது தான் முடிந்தது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன்” என்றும் பதிவிட்டிருந்தார்.


மீண்டு வந்த விஜய் ஆண்டனி:


இந்நிலையில், தொடர்ந்து மெல்ல மெல்ல உடல்நிலை தேறு வரும் விஜய் ஆண்டனி தன் தற்போதைய உடல்நிலை குறித்து மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில், ”அன்பு இதயங்களே...நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணர்கிறேன். வரும் ஏப்ரலில் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” எனப் பதிவிட்டு தன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.


 






முன்னதாக விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை பகிர்ந்ததுடன் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கோரியிருந்தார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் மற்றொரு படமான ’வள்ளி மயில்’ திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.