நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகி உள்ளது. நடிகை மஞ்சு வாரியர், நடிகர் சமுத்திரக்கனி போன்ற பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படத்தை தீரன் அதிகாரம் என்னொன்று, வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் செயின் மூவிஸ் வெளியிடுகிறது. இதேபோன்று நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தானா, நடிகர்கள் பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தில் ராஜ் தயாரித்துள்ளார். 


கடந்த 2014 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்து உள்ளது. 


இவர்களின் இரண்டு படங்களும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியானதால், யார் இவர்களில் கெத்து..? என்பதை நிரூபிக்க விஜய், அஜித்தின் ரசிகர்கள் திரையரங்குகளில் சேட்டையை சேவைபோல் செய்து வருகின்றனர். இன்று நள்ளிரவில் அஜித் நடிப்பில் வெளியான ’துணிவு’ திரைப்படம் இரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, சில திரையரங்குகளில் இரு நடிகர்களும் தங்கள் ஐடல்லாக நினைக்கும் நடிகர்களின் கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். அதே நேரத்தில் போட்டியாக நினைக்கும் நடிகர்களில் கட் அவுட்களை கிழித்து அட்டகாசமும் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த சம்பவங்களால் பல திரையரங்குகளில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸே தடியெடுத்து பொளந்து கட்டிய செய்திகளும் காலையிலிருந்து வெளிவருகிறது. 






இந்தநிலையில், சென்னை திரையரங்கு ஒன்றில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சிலர் கையில் சரவெடியை வைத்துகொண்டு கூட்டத்திற்கு நடுவில் கிறுக்குதனமான செயல்களை செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.