தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜெயசுதா 3வதாக திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிரபல நடிகை ஜெயசுதா:


1972 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான  பண்டண்டி கபுரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜெயசுதா, தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்கள், 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்கள், மலையாளத்தில் 10 படங்கள், இந்தி, கன்னடத்தில் 3 படங்கள் என இந்திய சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக ஜெயசுதா மாறினார். தெலுங்கில் அம்மா நடிகை என்றால் அதில் ஜெயசுதாவின் பெயர் தான் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருக்கும். 


வாரிசு:


கடந்த பொங்கல் தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில், அவருக்கு அம்மா கேரக்டரில் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றார். தமிழிலும் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் அவர் நடித்துள்ளார். 






குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை 1982 ஆம் ஆண்டு  தயாரிப்பாளர் வட்டே ரமேஷின் மைத்துனரான காகர்லபுடி ராஜேந்திர பிரசாத்தை ஜெயசுதா திருமணம் செய்தார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே இது விவாகரத்தில் முடிந்தது. தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு நிதின் கபூரை கல்யாணம் செய்த ஜெயசுதாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 2017 ஆம் ஆண்டு நிதின் கபூர் உயிரிழந்தார். அவர் மும்பையில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். அதன்பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயசுதா மீண்டும் சினிமாவில் முழு வீச்சில் நடித்து வருகிறார். 


தொழிலதிபருடன் திருமணமா?


64 வயதான ஜெயசுதா வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த  பிலிப் ரூல்ஸ் என்பவருடன் கலந்துக் கொண்டதாகவும், அவர் தான் ஜெயசுதாவின் 3வது கணவர் என்ற தகவலும் வைரலாக பரவியது. மேலும் அமெரிக்காவுக்கு விடுமுறைக்கு சென்ற இடத்தில் திருமணம் நடைபெற்றதாகவும் சொல்லப்பட்டது. இதனை மறுத்த ஜெயசுதா அமெரிக்காவைச் சேர்ந்த பிலில் ரூல்ஸ் ஒரு தொழிலதிபர் என்றும், அவர் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் தன்னுடைய பங்கை தெரிந்து கொள்ள அவர் உடன் வருவதாக தெரிவித்தார். 


இந்நிலையில் தான் ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆனால் இதுபற்றி ஜெயசுதா தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மேலும் திருமணம் தொடர்பான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.