உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பொதுவாக சினிமாவில் ஆண்கள் தான் பெண்ணின் மீதான காதலை நினைத்து பாடல் பாடுவது போன்ற காட்சிகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில படங்களில் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல்கள் இருக்கும். அதனைப் பற்றி காணலாம். 



  • தாஜ்மகால் - சொட்ட சொட்ட நனையுது 


1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் ஹீரோவாக அறிமுகமான படம் “தாஜ்மஹால்”. ரியா சென் இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சுஜாதா பாடிய “சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்” பாடல் மிகப்பிரபலமானது. 




  • நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை 


1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் தேவா இசையில் விஜய், சூர்யா, கௌசல்யா, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் “நேருக்கு நேர்”. இப்படத்தில் ஹரிணி பாடிய “மனம் விரும்புதே உன்னை” பாடல் இடம் பெற்றிருந்தது. 



  • கண்ணெதிரே தோன்றினாள் - சந்தா ஓ சந்தா


1998 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், கரண், சிம்ரன் நடிப்பில் “கண்ணெதிரே தோன்றினாள்” படம் வெளியானது. இதில் தேவா இசையில் ஹரிணி குரலில் இடம்பெற்ற ”சந்தா ஓ சந்தா” பாடல் பெண்ணின் காதலை அழகாக எடுத்துரைத்தது. 




  • ரிதம் - கல கலவென 


 


2000 ஆம் ஆண்டு அர்ஜூன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான படம் “ரிதம்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சாதனா சர்க்கம் பாடிய “கலகலவென பொழியும்” பாடல் பெண்ணின் காதலை மழைச்சாரலாக தூவியிருந்தது. 




  • அமர்க்களம் - உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு 


 


1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படம் வெளியானது. இப்படத்தில் பரத்வாஜ் இசையில் சித்ரா குரலில் இடம் பெற்ற “உன்னோடு வாழாத வாழ்வென்ன” பாடல் காதலர்களின் கீதமாக அமைந்தது.




  • நினைத்தேன் வந்தாய் - உன் மார்பில் விழி மூடி 


 


1998 ஆம் ஆண்டு கே.செல்வபாரதி இயக்கத்தில் விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் வெளியான படம் “நினைத்தேன் வந்தாய்”. இப்படத்தில் தேவா இசையில் கே.எஸ்.சித்ரா பாடிய “உன் மார்பில் விழி மூடி” பாடலின் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும். 




  • காதல் சுகமானது - சொல்லத்தான் நினைக்கிறேன்


 


2002 ஆம் ஆண்டு பாலசேகரனின் இயக்கத்தில் தருண் குமார், சினேகா, ப்ரீதா விஜயகுமார் நடிப்பில் வெளியான படம் “காதல் சுகமானது”. சிவ ஷங்கர் இசையமைத்த இப்படத்தில் “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற பாடலை நா.முத்துகுமார் எழுத கே.எஸ்.சித்ரா பாடியிருந்தார். காதல் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை அழகாக கொடுத்திருப்பார்கள். 



  • தெய்வத்திருமகள் - விழியிலே


 


2011 ஆம் ஆண்டு தெய்வத்திருமகள் படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில் “விழிகளில் ஒரு வானவில்” பாடல் சைந்தவி குரலில் இடம் பெற்றிருந்தது. 




  • றெக்க - கண்ணை காட்டு போதும்


 


2016 ஆம் ஆண்டு ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் “றெக்க” படம் வெளியானது. டி.இமான் இசையமைத்த இந்த படத்தில்  ஷ்ரேயா கோஷல் பாடிய “கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்” என்ற பாடல் காதலின் உறுதியை வெளிப்படுத்தியது. 




  • மன்மதன் - மன்மதனே நீ 


 


2004 ஆம் ஆண்டு சிலம்பரசன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “மன்மதன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் சாதனா சர்க்கம் பாடிய “மன்மதனே நீ கலைஞன் தான்” பாடல் காதலை கொண்டாடுபவர்களின் கீதமாக அமைந்தது.