தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவிஞர்களுள் வாலியும் , நா.முத்துக்குமாரும் அடங்குவர். இருவரும் வெவ்வேறு கோணங்களில் சினிமாவை அனுகினாலும் கூட , எல்லா தருணங்களிலும் கேட்கும் அளவிற்கான பாடல்களை எழுதியுள்ளனர். இன்று இருவரும் இந்த மண்ணுலகில் இல்லை என்றாலும் அவர்களின் பாடல்கள் என்றுமே அவர்களை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும் .ஒருமுறை வாலியும் நா.முத்துக்குமாரும் இணைந்து பேசிய நிகழ்ச்சி ஒன்றில் தனது துறை குறித்தும் துறையில் சிறந்து விளங்கியவர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் பேசிய வாலி “ நாம் எப்போதும் திரை பாடலாசிரியர்களாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. அதற்கு வெளியில் இலக்கிய வெளியிலும் நமக்கு ஒரு அந்தஸ்து வேண்டும்.உடுமலை நாராயண கவியை விட மகா கவிஞனே கிடையாது. ஆனால் அவர் வெளியில் அறியப்படவில்லை.
மேலும் நானும் கண்ணதாசனும் பாடல் எழுத உட்கார்ந்தால் முதல் நாள் பல்லவி வராவிட்டால் அடுத்த நாள் எழுதுவோம். ஆனால் பட்டுக்கோட்டையார் 10 நாட்கள் பனகல் பார்க்கில் உட்கார்ந்து பாட்டு எழுதுவார் ஆனால் அந்த பாட்டில் எந்த திருத்தமும் செய்ய தேவை இருக்காது.
ஒரு முறை நா.பார்த்தசாரதி மேடையில் , கவிஞர் வாலி நல்ல பாடல்களையும் எழுதியிருக்கிறார். மோசமான பாடல்களையும் எழுதியிருக்கிறார்.என பேசினார். அவர் பேசிய பிறகு நான் நா.பார்த்த சாரதி நல்ல நாவல்களையும் எழுதியிருக்கிறார். சில மோசமான நாவல்களையும் எழுதியிருக்கிறார்.என நான் சொல்ல மாட்டேன் . ஏனென்றால் அவை அனைத்தையுமே நான் படிக்கவில்லை. என்றேன்.
நான் 7 ஆயிரம் பாடலை எழுதியிருக்கிறேன். அதை அனைத்தையும் அவர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இதை படம் எடுப்பவர்கள் அல்லது சென்சார் போர்ட்தான் தீர்மானிக்க வேண்டும் வல்கரா இருக்கா இல்லையானு. நா.பார்த்த சாரதி ஏன் அவரது இன்ஷியலை (நா) காக்க மறந்துவிட்டார் என கூறி அமர்ந்தேன். என பல நினைவுகளையும் , தன் மீது வைத்த விமர்சனங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் வாலி.