பவன் கல்யாண் நடிப்பில் உருவான 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் உகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியானது. ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படத்துடன் மோதிய போதிலும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தொடக்கத்தைப் பெற்றுள்ளது. சாக்னில்க் (Sacnilk) வழங்கிய ஆரம்பக்கால தரவுகளின்படி, படம் வெளியான முதல் நாள் மதியம் 1 மணிக்குள் சுமார் 9.94 கோடி ரூபாய் வசூலை எட்டியது. சுமார் 2,064 காட்சிகளில் 60.7 சதவீத இருக்கைகள் நிரம்பி பவன் கல்யாணின் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

Continues below advertisement

மகிழ்ச்சியில் படக்குழு.. அதிர்ச்சி கொடுத்த பைரசி!

படம் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியை நோக்கிச் செல்லும் அதே வேளையில், திரையுலகைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் 'பைரசி'  இத்திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லை. படம் வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ், ஃபிலிமிசில்லா , மூவிரூல்ஸ்  போன்ற இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்துள்ளது. 'உஸ்தாத் பகத் சிங் முழுத் திரைப்படம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய' என்ற தேடல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபத்தை விளைவிக்கும் டொரண்ட் தளங்கள்

வெறும் குறைந்த தரத்தில்  தொடங்கும் இந்தப் பதிவுகள், சில மணிநேரங்களில் எச்டி (HD) தரத்திற்கு மாற்றப்பட்டு டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் எளிதாகப் பரப்பப்படுகின்றன. ஆனால் இத்தகைய தளங்களைப் பயன்படுத்துவது சட்ட ரீதியாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆபத்தானது. இத்தளங்களில் உள்ள தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் 'மால்வேர்' இணைப்புகள் உங்கள் செல்போன் தரவுகளைத் திருடவோ அல்லது நிதி மோசடிகளுக்கு உள்ளாக்கவோ வாய்ப்புள்ளது.

Continues below advertisement

சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும்?

இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி, திருட்டுத் தளங்களில் படங்களைப் பார்ப்பதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் சிக்கினால் 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது படத்தின் மொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் பின்னால் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. எனவே ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகரின் படத்தைத் திரையரங்குகளில் அல்லது அதிகாரப்பூர்வ ஓடிடி தளங்களில் மட்டுமே பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.