‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இராண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பதை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். 


பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. உலகம் முழுதும் வெளியான இத்திரைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர். 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப்படம், இந்த ஆண்டு வெளியான விக்ரம் உட்பட அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து சாதனை படைத்து இருக்கிறது.  


 






முன்னதாக, பொன்னியின் செல்வன் படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்தது. இதையடுத்து, படத்தின் வசூல் குறித்த தரவுகளை லைகா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன்படி, திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தது. தொடர்ந்து 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் படம் 450 கோடி எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு, இராண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. முன்னதாகவே படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், இராண்டாம் பாகத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடந்து வருகிறது. படம் அடுத்த வருடம் கோடையில் படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை நடிகரும், விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில், பொன்னியின் செல்வன் இராண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக, பொன்னியின் செல்வன் முதல்பாகத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமே வெளியிட்டது. ஆனால், தற்போது உதயநிதி அறிவித்திருக்கும் அறிவிப்பை வைத்து பார்க்கும், பொன்னியின் செல்வன் இராண்டாம் பாகத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது என்பது தெரிகிறது.