மருத்துவமனையில் ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செப்டம்பர் 30 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து முன்கூட்டியே முடிவு செய்தபின்னர் இன்று அவருக்கு சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. இருந்தும் மருத்துவமனை சார்பாகவும் ரஜினியின் மனைவி அல்லது மகள் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத காரணத்தினால் ரசிகர்கள் பதற்றத்தில் இருந்து வந்தார்கள். இந்நிலையில் ரஜினியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனையில் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஆசுவாசமடைந்துள்ளார்கள். 


சூப்பர்ஸ்டார் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்


ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டிக் கொள்வதாக நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ரஜினியை சூப்பர்ஸ்டார் ரஜினி என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. 






கடந்த சில ஆண்டுகளாகவே யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது தொடர்பாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையில் மோதல் ஏற்பட்டு வந்தது. ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை இந்த மோதலை இன்னும் பெரிதாக்கியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஜய் லியோ பட ஆடியோ லாஞ்சில் பேசினார். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு தான் போட்டிபோடவில்லை என்பதை திட்டவட்டமாக விஜய் பேசினார். மேலும் இன்னும் ஒரு படத்தோடு சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய் தன் சக நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவையே நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறார். விஜயின் இந்த செயற்பாடுகள் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.